2.ஓ, காலா ரிலீஸ் தேதி... அடுத்த படம்... ரசிகர்கள் மத்தியில் அறிவித்த ரஜினிகாந்த்!
Recommended Video

சென்னை : ரஜினிகாந்த், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 5-வது நாளாக தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.
இன்று சென்னை மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பில், ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்துள்ள '2.ஓ' படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற நான் மீண்டும் உயிர்பெற்று வர எனது ரசிகர்களே காரணம் என உருக்கமாகப் பேசி இருக்கிறார் ரஜினிகாந்த்.

ரஜினி பேச்சு
ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, "சென்னை எப்போதுமே எனக்கு மெட்ராஸ் தான். மெட்ராஸ் போன்று அனைத்து வகையிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என கர்நாடகாவில் பேசிக் கொள்வார்கள். எனக்குள் நடிப்புத்திறமை இருப்பதை கண்டுபிடித்தவர் என் நண்பர் ராஜ்பகதூர் தான். நான் நடிகராவதற்கு அண்ணன் கஷ்டப்பட்டு உழைத்து உதவினார்.

தமிழே தெரியாது
1973 ல் முதல் முறையாக மெட்ராஸ் வந்தேன். எனக்கு தமிழும் தெரியாது, ஆங்கிலமும் பேச தெரியாது. ஆனால் என் நடிப்பை பார்த்து விட்டு பாலச்சந்தர், உன்னை 3 படங்களில் ஒப்பந்தம் செய்ய உள்ளேன். நீ தமிழ் மட்டும் கற்றுக் கொள், உன்னை எங்கே கொண்டு விடுகிறேன் பார் என்றார்.

தத்தெடுக்காத குழந்தை
பாலச்சந்தருக்கு நான் தத்தெடுக்காத குழந்தை மாதிரி. அதன் பிறகு பஞ்சு அருணாச்சலம் எனக்கு பல நல்ல படங்களை கொடுத்து, என்னை உயர்த்தினார். சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் என்னை சூப்பர் ஸ்டாராக்கினர். இந்தியாவே என்னை திரும்பிப்பார்க்க வைத்தவர் ஷங்கர்.

ஏப்ரல் ரிலீஸ்
ஷங்கர் பிரம்மாண்டமாக இயக்கி உள்ள 2.0 படம் ஏப்ரல் 14 ரிலீசாகிறது. சந்திரலேகா படம் போல் 2.0 நிச்சயம் அனைவராலும் பேசப்படும் படமாக அமையும். அதன் பிறகு 2 மாதங்களில் 'காலா' ரிலீஸ் ஆகிறது. அதில் எனக்கு வித்தியாசமான வேடம் கொடுத்துள்ளார் ரஞ்சித்.

கடவுளுக்குத்தான் தெரியும்
அதன் பிறகு என்ன என்பது கடவுளுக்குத் தான் தெரியும். கனவுகளை அடைய நியாயமான முறையில் முயற்சி செய்ய வேண்டும். கனவு நிறைவேறாவிட்டால் கவலைப்பட வேண்டாம். என் உடல் ஆரோக்கியத்திற்கு தியானமே காரணம். ரசிகர்கள் அனைவரும் தியானம் செய்ய வேண்டும்.

ரசிகர்களே காரணம்
நான் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றபோது மீண்டும் உயிர் பெற்று வர ரசிகர்களே காரணம். மற்றவர்கள் உங்களை மதிப்பதை விட, தனிமையில் இருக்கும் போது உங்களை நீங்களே மதிக்கும்படியான சிந்தனைகள் இருக்க வேண்டும். பின்னர் உங்கள் குடும்பம், சுற்றத்தினர் மதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும்." என ரசிகர்கள் மத்தியில் பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.


Click it and Unblock the Notifications











