ரஜினி என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்!- இயக்குநர் ரஞ்சித்
ரஜினி சார் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன் என்று இயக்குநர் பா ரஞ்சித் கூறினார்.
அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித், அடுத்தப்படியாக கார்த்தியை வைத்து மெட்ராஸ் எனும் ஹிட் படத்தை கொடுத்தார்.

அடுத்தப்படியாக சூர்யாவை இயக்க இருந்தவர், ரஜினியிடமிருந்து அழைப்பு வர ‛கபாலி' கதையை சொல்லி ஓ.கே., வாங்க, மூன்றாவது படத்திலேயே ரஜினியுடன் இணைந்தார். கபாலி படமும் வெளியாகி வசூலைக் குவித்துவிட்டது.
இந்த முறையும் சூர்யா படத்துக்குப் போகவிருந்த ரஞ்சித்தை, கபாலி கொடுத்த உற்சாகத்தால் மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொண்டார் ரஜினி.
இப்படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க உள்ளார்.
இந்நிலையில் சுசீந்திரன்-விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள ‛மாவீரன் கிட்டு' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. இதில் இயக்குநர்கள் ரஞ்சித், சமுத்திரகனி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் டிரைலரை ரஞ்சித் வெளியிட்டார்.
விழாவில் பேசிய ரஞ்சித், ‛‛கபாலி படத்திற்கு பிறகு ரஜினி மீண்டும் அழைத்தார். நான் சொன்ன ஒன்-லைன் ஸ்டோரி அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. உடனே படம் பண்ணலாம் என்று சொல்லிவிட்டார். என் மீதும், என் கதை மீதும் உள்ள நம்பிக்கையில் மீண்டும் இன்னொரு பட வாய்ப்பை கொடுத்துள்ளார் ரஜினி. நிச்சயம் அவரின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











