வெள்ள நிவாரணப் பணி... சத்தமின்றி இன்னமும் தொடரும் ரஜினி!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக நிவாரணப் பொருள்களை தொடர்ந்து அனுப்பி வருகிறார் ரஜினிகாந்த்.
அவரது ராகவேந்திரா மண்டபத்திலிருந்து தினமும் பல ஊர்களுக்கு லாரிகளில் நிவாரணப் பொருள்களை ரசிகர் மன்றத்தினர் மூலம் அனுப்பி வருகிறார் ரஜினி ரசிகர் மன்றப் பொருப்பாளர் சுதாகர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டும்.. அதே நேரம் விளம்பரமின்றி செய்ய வேண்டும் என்பது ரஜினி சொல்லிவிட்டதால், வெள்ளம் பாதித்த டிசம்பர் 3 ம் தேதியிலிருந்து லாரிகளில் நிவாரணப் பொருட்கள் வரவழைக்கப்பட்டு, ரசிகர்கள் மூலம் அனுப்பப்பட்டன. முதலில் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் அலுவலகத்தில் வைத்து இந்தப் பணிகள் நடந்தன.
பின்னர் நிவாரணப் பொருள்கள் முழுவதும் ராகவேந்திரா மண்டபத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு மேலும் பல லோடுகள் நிவாரணப் பொருள்கள் தருவிக்கப்பட்டன. பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்து நிறைய பொருள்களை வரவழைத்திருந்தார் ரஜினி.
சென்னை மட்டுமல்லாது, வெள்ளம் பாதித்த கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் முழுவதற்கும் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆரம்பத்தில் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விநியோகித்த ரஜினி, இப்போது மக்கள் தங்கள் வாழ்க்கையைத் துவங்க அடிப்படைத் தேவையாக உள்ள பொருள்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
பாய், போர்வைகள், மருந்துகள், சமையல் பாத்திரங்கள், அரிசி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பைகளை ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படுகிறது.
இதுவரை ரூ 6 கோடிக்கும் அதிக மதிப்பிலான நிவாரணப் பொருள்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி வழங்கியிருக்கிறார்.
மேலும் சென்னையைச் சுத்தம் செய்ய பல்வேறு ஊர்களிலுமிருந்து வந்த ஊழியர்கள் தங்கிக் கொள்ள இலவசமாக ராகவேந்திரா மண்டபத்தை அளித்துள்ளார் ரஜினி. இந்த பணியாளர்கள் இன்று வரை மண்டபத்திலேயே தங்கி துப்புரவுப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











