வெளியே போ என விரட்டிய தயாரிப்பாளர்: ரஜினி சொன்ன உண்மைச் சம்பவம்
தான் ஆரம்பகாலத்தில் பட்ட அவமானங்களை ரஜினி சமீபத்தில் ஒரு படவிழாவில் வாய்த்திறந்து சொன்னார். கையில் பைசா பணம் இல்லாமல் பல நூறு பேர் உள்ள செட்டில் தயாரிப்பாளர் ஒருவர் மிரட்டி வெளியே துரத்தியதும், தான் பஸ்சுக்கு கூட காசில்லாமல் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் நடந்துச் சென்றதையும் ரஜினி சுவாரஸ்யமாக குறிப்பிட்டார்.

கடினமான ஆரம்பகாலம்
ரஜினிகாந்த் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி உச்சம் தொட்டவர். தனது வாழ்க்கையில் நடந்த எதையும் அவர் மறந்ததில்லை, மறைக்கவும் இல்லை. தான் கண்டக்டராக இருந்ததையும் பல கடினமான சூழ்நிலையில் தான் பட்ட அவமானங்களை தாண்டி வெற்றிப்பெற்றதையும் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

அவமானங்களை அடுத்தவரிடம் காட்டாத ரஜினி
தான் சந்தித்த பிரச்சினைகளை வைத்து அவர் தனது வாழ்க்கையில் யாரையும் அவமானப்படுத்த முனைந்ததில்லை. மிக பண்பட்ட மனிதராக நடந்ததை பல சந்தர்ப்பங்களில் பார்க்கலாம். ஆரம்பகாலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வில்லனாக உயர்ந்து லேசாக பிரபலமாக தொடங்கியிருந்தார் ரஜினி. 16 வயதினிலே படத்தில் வில்லனாக ரஜினி நடித்திருந்தார். அதில் அவர் பெற்ற சம்பளம் ரூ.2000. இன்றைய காலகட்டத்தில் 50000 ரூபாய்க்கு சமம் எனலாம்.

படபிடிப்புக்கு அழைத்த நிறுவனம்
கையில் பெரிய அளவு வருமானம் இல்லை, சொந்தமாக வாகனம் கூட இல்லாத நிலையில் இருந்த நேரம். அவருக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிறு வேடம் தான் 1000 ரூபாய் பேசியுள்ளார். படபிடிப்பின்போது கார் அனுப்புவோம் சரியாக காலை 8 மணிக்கு ஷூட்டிங்குக்கு ரெடியா இருங்க என்று சொல்லியிருக்கிறார்கள். படபிடிப்பு ஆரம்பிக்கும் முன் முழுப்பணத்தையும் தந்துவிடுவோம் என்றும் கூறியுள்ளார்கள்.

கையில் காசு முகத்தில் மேக்கப்
படபிடிப்பு சொன்ன நாள் அன்று அதிகாலையில் எழுந்து தயரான ரஜினி 7 மணியிலிருந்து காருக்காக காத்திருந்துள்ளார். ஆனால் கார் 9 மணிக்கு மேல் வந்துள்ளது. உடனடியாக காரில் ஏறிய ரஜினி 1000 ரூபாய் கொடுத்தார்களா என வந்தவரிடம் கேட்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கொடுப்பார்கள் எனச் சொல்லி ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு அழைத்துப்போயுள்ளனர்.
போய் இறங்கியவுடன் என்னய்யா இவ்வளவு லேட்டு ஹீரோ ஹீரோயின் எல்லாம் வந்துவிட்டார்கள் போ ஓடிப்போய் மேக்கப் போட்டுட்டு வா என்று சத்தமாக கூறியுள்ளனர். அய்யா அந்த 1000 ரூபாய் தர்றேன்னு சொன்னீங்க என்று கேட்டுள்ளார். முதலில் மேக்கப் போட்டு நடி பிறகு தருவார்கள் என்று பதில் வந்துள்ளது. அய்யா அது முடியாதுங்க பணம் சொன்னப்படி கொடுங்க, பணம் வாங்காமல் மேக்கப் போட மாட்டேன் என்று ரஜினி கூறியிருக்கிறார்.

அவமானப்படுத்திய தயாரிப்பாளர்
அப்போது வேகமாக வந்த காரிலிருந்து இறங்கிய படத்தயாரிப்பாளர் கோபமாக என்னடா நீ பெரிய ஆர்ட்டிஸ்டா, ரெண்டு படம் நடிச்ச பெரிய நடிகரா? பணம் வாங்கிட்டுத்தான் மேக்கப் போடுவியா என்று திட்டினார். நான் என்னங்க தப்பு செய்தேன் நீங்கதான் சொன்னீங்க அதைத்தானே கேட்கிறேன் என கேட்க நான் தான் சொல்கிறேன் உனக்கு கேரக்டர் இல்ல கிளம்பு என்று சொல்லியுள்ளார்.

கார் இல்லாமல் நடந்துச் சென்ற ரஜினி
சரி விடுங்க கார் அனுப்புங்க நான் போகிறேன் என்று ரஜினி சொன்னபோது கார் எல்லாம் கிடையாது போ என விரட்டிவிட கையில் பணம் எதுவும் இல்லாமல் கால்நடையாக கோடம்பாக்கம் சாலையில் நடந்த நான் அங்கே இது எப்படியிருக்கு என ஒட்டியிருந்த போஸ்டரை பாத்தப்படி சென்றதும், அப்போது சிலர் ஏய் பறட்ட இது எப்படி இருக்கு எனக்கேட்டுள்ளனர்.

அவமானத்தால் கூனிக்குறுகிய ரஜினி
அப்போது அவமானத்தால் கூனி குறுகிய ரஜினி இதே கோடம்பாக்கம் சாலையில் காரில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நுழைந்து அதே இடத்தில் காரைவிட்டு இறங்கணும் என ரஜினி நினைத்துள்ளார். அதன்பிறகு 2 ஆண்டுகளில் பிரபலமாகி ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரின் இத்தாலி ஃபியட்டை வாங்கி ட்ரைவரை போட்டு அதேபோல் போய் இறங்கியதாக ரஜினி கூறியிருப்பார்.

அவமானத்தை பாடமாக எடுத்த ரஜினி
ஆனால் அதை அவர் அன்று அனுபவித்த அவமானத்தை கலங்கியபடியோ கோபமாகவோ கூறாமல் சிரித்தப்படி கூறி அதன் பின்னர் தான் அடைந்த வெற்றிக்கு நான் காரணமல்ல அப்போது அமைந்த சூழ்நிலை, உடன் பயணித்த மனிதர்கள், கிடைத்த வாய்ப்புகள் உள்ளிட்டவற்றையே முன் நிறுத்தி பேசினார் ரஜினி. மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரான பின்னரும் பழசை மறக்காத பண்பும் அவர் பேச்சில் வெளிப்பட்டது.


Click it and Unblock the Notifications











