'தலைவர் வர்றார்'... செம்ம உற்சாகத்துடன் ஊர் திரும்பும் ரஜினி ரசிகர்கள்!
Recommended Video

சென்னை: கோடம்பாக்கமே திருவிழாக் களை கட்டியிருக்கிறது ரஜினி ரசிகர்களால். ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு ஆரம்பித்த முதல் நாளிலிருந்து தினமும் காலை 6 மணிக்கெல்லாம் அன்றைய நாளில் பார்க்கவிருக்கும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வாகனங்களில் வந்து குவிந்துவிடுகின்றனர்.
ரஜினி அரசியலுக்கு வருகிறாரா... 31-ம் தேதி முடிவை அறிவிப்பாரா... தள்ளிப் போடுவாரா? என்ற கேள்விகளை மீடியாவிலும் சில அரசியல்வாதிகளும்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர ரசிகர்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. 'தலைவர் வர்றார்... அதுல சந்தேகமே இல்லை. அதை அவர் இப்பவே அறிவிச்சாலும் சரி, இன்னும் சில தினங்கள் கழிச்சு சொன்னாலும் சரி,' என்பதே பெரும்பாலான ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

"எங்களைப் பொறுத்தவரை தலைவர் அரசியலுக்கு வருகிறார்.. தமிழகத்துக்கு நல்ல மாற்றம் தரவிருக்கிறார். தகுந்த நேரத்தில்தான் அதை அவர் செயல்படுத்த முடியும். ஆனால் இப்போதைக்கு எல்லாருடைய எதிர்ப்பார்ப்பையும் புரிந்து, சில அறிவிப்புகளை மட்டும் வெளியிடுலவார் என நம்புகிறோம்," என்கிறார் ஈரோடு மாவட்ட நிர்வாகி சாம்ராஜ்.
இதுவரை நான்கு நாட்களில் சுமார் 15 மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் ரஜினிகாந்த். ரசிகர்கள் யார் மனதும் கோணாத அளவுக்கு, அதிக நேரம் காக்க வைக்காமல் விறுவிறுப்பாக போட்டோ எடுக்கும் படலம் நடந்து வருகிறது. ரசிகர்களும் மிகுந்த கட்டுப்பாடு காக்கின்றனர், தலைவர் மனசு சங்கடப்படக் கூடாதே என்று.
போட்டோ எடுத்து முடித்ததுமே அனைவரையும் கீழ் தளத்துக்குச் சென்று சாப்பிடுங்கள் என்று அனுப்பி வைக்கின்றனர். அனைவருக்கும் அங்கு வடை, பாயசத்துடன் சைவ விருந்து பிற்பகல் வரை போடப்படுகிறது.
போட்டோ எடுத்து முடித்த திருப்தி, வயிறார ரஜினி தந்த விருந்து முடிந்ததும், ஊருக்குக் கிளம்பும் ரசிகர்கள், "தலைவரின் 31-ம் தேதி அறிவிப்பைக் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளுடனும் ஊரில் காத்திருப்போம்," என்கின்றனர் உற்சாகத்துடன்.


Click it and Unblock the Notifications











