ரஜினி, கமலின் அரசியல் நிலைப்பாட்டால் ரசிகர்கள் அதிருப்தி.. வசூல் பாதிக்குமா?
Recommended Video

சென்னை : சினிமாவில் இருந்து ஒரே சமயத்தில் அரசியலில் குதித்திருக்கும் ரஜினி, கமல் இருவருமே இன்னும் சினிமாவை முழுவதுமாகக் கைவிடவில்லை. கமல் அரசியல் கட்சியைத் தொடங்கி மக்களைச் சந்தித்து வருகிறார். ரஜினி அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ரஜினியின் அரசியல் அறிவிப்புதான் அடுத்து வெளியாகும் எனக் காத்திருந்த நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியிட்டார் ரஜினி. அதே போல, கமலும், 'விஸ்வரூபம் 2', 'சபாஷ் நாயுடு' படங்களோடு சினிமாவுக்கு முழுக்கு போடுவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடிப்பதாக அறிவித்தார்.

ரஜினி, கமல் இருவருமே தற்போதைக்கு ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்கிற நிலையில் தான் இருக்கிறார்கள். சினிமா ஸ்ட்ரைக் முடிந்தபின் இருவரது படங்களின் வேலைகளும் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், காவிரி விவகாரம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ ஆகியவற்றிற்கு எதிராக தமிழக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். கடந்த ஞாயிறன்று தூத்துக்குடிக்குச் சென்ற கமல் மக்களோடு இணைந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.
ரஜினியும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிராகக் கருத்துச் சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தில் ரஜினியும், கமலும் ஒரே பக்கமே நிற்கிறார்கள். இதற்கிடையே, ரஜினியும் கமலும் காவிரி விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடகாவில் வளர்ந்தவராக இருந்தாலும், ரஜினி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் எனக் குரல் கொடுத்திருக்கிறார். இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கன்னட ரசிகர்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இருக்கும் ரஜினி ரசிகர்கள் காவிரி விவகாரத்தில் எந்தக் கருத்து தெரிவித்தாலும் ரஜினிக்கு அது பாதிப்புதான் எனக் கூறி கருத்து தெரிவிக்க வேண்டாம் என வலியுறுத்தினர். அதற்குப் பிறகு ரஜினி இதைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.
ஆனால், கமல் தொடர்ந்து தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். இருவரின் மீதும் கர்நாடகாவில் அதிருப்தி நிலவத் தொடங்கி இருக்கிறது. இனி வெளிவரவிருக்கும் ரஜினியின் 'காலா', '2.ஓ' ஆகிய படங்களும் கமலின் 'விஸ்வரூபம் 2', 'சபாஷ் நாயுடு' ஆகிய படங்களும் கர்நாடகாவில் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி வரலாம்.
அரசியல் நிலைப்பாட்டால் இருவரது படங்களின் வசூலும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. கன்னட ரசிகர்களின் எதிர்ப்பை மீறி ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவராலும் தங்கள் படங்களை அங்கு திரையிடமுடியாது என்பதால் ரசிகர்களின் விருப்பத்துக்கு செவி சாய்த்தே ஆகவேண்டும். இல்லையெனில், படங்களின் வசூல் பற்றிக் கவலைப்படாமல் நியாயமான ஸ்டாண்ட் எடுக்கவேண்டும். என்ன முடிவு செய்கிறார்கள் எனப் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











