ஒரே மேடையில் ரஜினி - கமல்... பரபரப்பு கிளப்பும் மலேசிய விழா!
கோலாலம்பூர்: தமிழ் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது. நடிகர் சங்க கட்டட நிதி நிதிக்காக நடக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்கிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இங்கு அமைய உள்ளன.

நிதி திரட்ட
இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். கட்டட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி கூடுதல் நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.

கலைவிழா
அதன்படி மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் (6-ந்தேதி) இந்த விழா நடக்கிறது. மலேசிய அரசுடன் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை இந்த விழாவை நடத்துகிறது. இதில் நடிகர்-நடிகைகள் நடனம், நாடகம், பாடல், நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்க உள்ளன.

ரஜினி - கமல்
இந்த விழாவில் 340 நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்க அறக்கட்டளையில் நடிகர் கமல்ஹாசன் உறுப்பினராக இருக்கிறார். அவரும் இந்த விழாவில் பங்கேற்கிறார். நடிகர் ரஜினிகாந்தும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இருவருக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) மலேசியா புறப்படும் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகள்
நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள் ஏற்கனவே மலேசியா சென்று விட்டனர். அங்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகின்றனர்.

ஒரே மேடையில்
மலேசிய கலைவிழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒரே மேடையில் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் அரசியல் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடக் கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications











