8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்கும் ரஜினிகாந்த்!
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் ரசிகர்களை மொத்தமாகச் சந்திக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதுவும் ஒரு நாள் இரு நாள் சந்திப்பல்ல... 5 நாட்கள்!
ஏப்ரல் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தன் ரசிகர்களுக்கு ஒதுக்கியுள்ளார் ரஜினி.

இந்த முடிவுக்கு அவர் திடீரென வரவில்லை. இலங்கை பயண ரத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தங்களை சந்திக்க வேண்டும் என ரஜினிக்கும் ரஜினி ரசிகர் தலைமை மன்றத்துக்கும் கோரிக்கைகள் அனுப்பி வந்தனர்.
சில மாதங்களுக்கு முன்னர் திரளாகக் கூடிய ரசிகர் மன்றத்தினர், தங்களை சந்திப்பதை தலைவர் ஏன் நீண்ட காலமாக தள்ளிப் போடுகிறார் என்று கேள்வி எழுப்பி, துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.
இந்த சூழலில்தான், ரசிகர்களுடனான சந்திப்பை எப்படி நடத்துவது என யோசித்து, முதலில் நிர்வாகிகளை அழைத்துப் பேசத் திட்டமிட்டனர்.
அதன்படி வரும் ஏப்ரல் 2-ம் தேதி நிர்வாகிகளை அழைத்து, மன்றப் பொறுப்பாளர்கள் பேசுகின்றனர். அவர்களிடம் ஆலோசித்த பிறகு வரும் ஏப்ரல் 11 முதல் 16 வரை ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் ரஜினி.
ரஜினி கடைசியாக ரசிகர்களைச் சந்தித்தது நவம்பர் 3, 2008-ல்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்காக நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தில் நவம்பர் 1-ம் தேதி பங்கேற்று, இலங்கை அரசை கடுமையாகத் தாக்கிப் பேசிய ரஜினி, 'ஈழத்தில் தமிழர் பிணங்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளனர்', என்று முழங்கினார்.
அந்த சூட்டோடுதான் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த அந்த சந்திப்பில் கிட்டத்தட்ட 1000 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 30 பேருக்கு (மாவட்டத்துக்கு ஒருவர் வீதம்) கேள்வி கேட்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களின் கேள்விகளுக்கு ரஜினி பதிலளித்தார்.
அந்தப் பதில்கள் அனைத்துமே அடுத்த ஒரு வாரத்துக்கு பரபரப்பான செய்திகளாக மீடியாவில் உலா வந்தன.


Click it and Unblock the Notifications











