'ரஜினி அரசியலுக்கு வருவதில் எங்கள் குடும்பத்தினருக்கு விருப்பமில்லை'- அண்ணன் பேட்டி
ராமேஸ்வரம்: ரஜினி அரசியலுக்கு வருவதில் எங்கள் குடும்பத்தினருக்கு விருப்பமில்லை என்று அவரது அண்ணன் சத்தியநாராயணாராவ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் பற்றி இருபதாண்டுகளாக பலரும் பேசி வருகின்றனர். ஆனால் அதுபற்றிய அத்தனைக் கேள்விகளுக்கும் கையை மேலே உயர்த்தி கடவுளைக் காட்டி வருகிறார் ரஜினி.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு இன்று காலை நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா தனது குடும்பத்துடன் வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சத்யநாராயணா ரூ.25 ஆயிரம் செலுத்தி, ராமேசுவரம் காசி விஸ்வநாதர் சன்னதியில் 1008 வெள்ளி கலசாபிஷேக பூஜை நடத்தினார்.
தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவும், காவிரி பிரச்சினையில் தீர்வு ஏற்படவும், தமிழக-கர்நாடக மக்கள் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டியும் கலசாபிஷேக பூஜை நடத்தினேன்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டார். அவர் அரசியலுக்கு வருவதில் எனக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் விருப்பம் இல்லை. தொடர்ந்து அவர் படங்களில் நடிப்பார். எந்திரன்-2 படம் வேகமாக தயாராகி வருகிறது," என்றார்.


Click it and Unblock the Notifications











