தமிழாற்றுப்படையை படித்த பின் வைரமுத்து மீதான மதிப்பு அதிகமாகிடுச்சு- பாராட்டிய ரஜினி
சென்னை : தமிழாற்றுப்படை புத்தகத்தை படித்த பிறகு வைரமுத்து மீதான மதிப்பு நூறு மடங்கு அதிகமாகி விட்டாதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசி உள்ளார். ரஜினியின் இந்த பேச்சு இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அனைவரிடமும் ஏற்படுத்தி உள்ளது.
கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை புத்தகம் 2019 ம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நீதியரசி விமலா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அனைவரையும் கவர்ந்த ரஜினியின் பேச்சு
இந்நிலையில் சென்னையில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தக பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டைரக்டர் ஷங்கர், நடிகர் சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து பற்றியும், அவர் எழுதிய தமிழாற்றுப்படை புத்தகம் பற்றியும் ரஜினி பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது.

வைரமுத்து மீதான மதிப்பு கூடி விட்டது
ரஜினி பேசுகையில், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் என்னிடம் தமிழாற்றுப்படை புத்தகத்தை கொடுத்தார்கள். அதை நான் படித்தேன். அந்த புத்தகத்தை படித்த பிறகு வைரமுத்து மீதான மதிப்பு நூறு மடங்கு அதிகமாகி விட்டது. அந்த புத்தக வெளியீட்டு விழாவில் ப.சிதம்பரம் அவர்கள் ஒரு கருத்தை சொன்னார். நிலப்பரப்பு, அங்கு வாழ்கிற மக்கள், அவர்கள் பேசுகிற மொழி. இதை வைத்து தான் ஒரு இனம் உருவாகிறது. அந்த நிலபரப்பு அழிஞ்சு போனால் கூட அந்த இனம் அங்கு இருக்கும். ஆனால் மொழி அழிந்து போனால் அந்த இனமே அழிந்து போகும். அந்த இனத்தோட உயிர்மூச்சே மொழி தான்.

ஹேண்ட்ஸ் ஆஃப் வைரமுத்து சார்
அந்த தமிழ் மொழியை வளர்த்தவர்கள், பாதுகாத்தவர்கள், பெருமை சேர்த்தவர்கள், அவர்களுடைய தொகுப்பு தான் தமிழாற்றுப்படை. நமது இளைஞர்கள், வரலாறு, இலக்கியம் படிப்பவர்கள் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். இதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழாற்றுப்படை புத்தகத்தை நீங்கள் படித்தால் போதும். அனைத்து தகவல்களும் கிடைத்து விடும். ஹேண்ட்ஸ் ஆஃப் வைரமுத்து சார் என்றார் ரஜினி.

நட்பை கடந்து இப்படி ஒரு மரியாதையா
ரஜினியும், கவிஞர் வைரமுத்துவும் 30 ஆண்டு நண்பர்கள் என அவர்கள் இருவருமே பல முறை கூறி உள்ளனர். அந்த நட்பை கடந்தது கவிஞர் வைரமுத்து மீதும், அவரது தமிழ் மீதும் ரஜினிகாந்த்திற்கு இப்படி ஒரு மரியாதை உள்ளது என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ரஜினி பேசிய இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











