ராகவேந்திரா மண்டபத்தில் 1000 துப்புரவுப் பணியாளர்களுக்கு தங்குமிடம்.. ரஜினி ஏற்பாடு!
சென்னையைச் சுத்தம் செய்ய வந்த 1000 துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை இலவசமாகத் தந்துள்ளார் ரஜினிகாந்த்.

வெள்ளம் பாதித்த சென்னை மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை ரஜினிகாந்த் செய்து வருகிறார்.

மழை வெள்ளம் பெருக்கெடுத்தோடிய நாட்களில் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்களை ராகவேந்திரா மண்டபத்தில் தங்க வைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார் ரஜினி. தொடர்ந்து நான்கு தினங்கள் அவர்கள் மண்டபத்தில் தங்கினர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்ட மக்களுக்கு ரஜினிகாந்த் ரூ 5 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் வழங்கினார். கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை இந்தப் பொருள்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

அடுத்து இப்போது மீண்டும் ராகவேந்திரா மண்டபத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இலவசமாகத் தந்துள்ளார் ரஜினி. மழை வெள்ளத்தில் சென்னை மாநகரமே குப்பைக் கிடங்காக மாறிப் போயுள்ளது. இதைச் சுத்தம் செய்ய வெளியூர்களிலிருந்து ஏராளமான துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று தர்மபுரி, சேலம், நாமக்கல், ஒசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலிருந்து சென்னை வந்த ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க இடமின்றி அவதிப்பட்டனர். தகவல் அறிந்ததும், அவர்கள் அனைவரையும் தனது ராகவேந்திரா மண்டபத்தில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார் ரஜினி.

இதைத் தொடர்ந்து மண்டபம் அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. சென்னையில் துப்புரவுப் பணி முடியும் வரையில் அனைவரும் ராகவேந்திரா மண்டபத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறும் ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











