எல்லா ரசிகர்களுடனும் படமெடுக்க முடியவில்லையே...! - ரஜினி வேதனை
கோலாலம்பூர்: மலேசியப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தாய்லாந்து கிளம்பும் முன் ரஜினி அளித்த பேட்டியில், 'எல்லா ரசிகர்களுடனும் படமெடுத்துக் கொள்ள முடியவில்லையே' வேதனை தெரிவித்தார்.
மலேசியாவில் மொத்தம் 28 நாட்கள் கபாலி படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டார். படப்பிடிப்பு நடந்த நாட்கள் முழுவதும் அவர் தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களுடன் படமெடுத்துக் கொண்டார். பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

ரஜினியின் வேதனை
அவர் கூறுகையில், "மலேசியாவில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. அதேசமயத்தில் மிகுந்த வலியையும் கொடுக்கிறது. வலி என்னன்னா.. எனது ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுக்க முடியவில்லையே என்பதுதான். நடைமுறையில் அது சாத்தியம் இல்லாததால் என்னால் அதனைச் செய்ய முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். எனது ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

மலேசியா எப்படி மாறிடுச்சி?
மலேசியாவையும், மலேசிய மக்களையும் நான் மிகவும் விரும்புகிறேன். மலேசியா இவ்வளவு அழகாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 78-ல் (1978) ‘பிரியா' படத்திற்காக நான் மலேசியா வந்தேன். அதன்பிறகு சுமார் 37 வருடங்கள் கழித்து இப்போதுதான் மீண்டும் இங்கு வந்துள்ளேன். மலேசியா மொத்தமா மாறிடுச்சி!

மலேசியாவில் பிறந்த கபாலி
இங்கு நாங்கள் எடுத்திருக்கும் காட்சிகள் கண்டிப்பாக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்த படத்தில் குறிப்பாக ‘கபாலி' என் கேரக்டர் மலேசியாவில் பிறந்து வளர்ந்தது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வளரும்
இதன் பிரதிபலிப்பாக இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு மேலும் மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

மலேசிய அமைச்சர்
இந்த சந்திப்பின் போது ரஜினியுடன், கபாலி படக்குழுவினர் மட்டுமல்லாமல், மலேசிய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸீசும் உடனிருந்தார்.


Click it and Unblock the Notifications











