கபாலி படப்பிடிப்புக்கு அபார ஒத்துழைப்பு தந்தது மலேசிய அரசு! - ரஜினிகாந்த்
சென்னை: மலேசிய அரசு கபாலி படப்பிடிப்புக்குத் தந்த அபார ஒத்துழைப்புக்காக அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக்குக்கு நன்றி தெரிவித்தேன். இந்த சந்திப்பை அதற்குப் பயன்படுத்திக் கொண்டேன் என்று ரஜினிகாந்த் கூறினார்.
ஐந்து நாள் பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்த மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் அங்கு தங்கி இருந்தோம். அப்போது மலேசிய அரசு அபார ஒத்துழைப்புக் கொடுத்தது. அதற்காக நன்றி சொல்ல மலேசிய பிரதமரைச் சந்திக்க விரும்பினேன். ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் முடியவில்லை. அவர் சென்னை வரும்போது, சந்திக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதன்படி மலேசியப் பிரதமர் இங்கு வந்திருந்தார். அதற்காக என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். இது ஒரு நல்லெண்ண சந்திப்பு.
கபாலி படத்தின் காட்சிகளைப் பார்த்து ரசித்தார். புதிய படங்களின் ஷூட்டிங்குக்காக மீண்டும் மலேசியா வருமாறு கேட்டுக் கொண்டார்," என்றார்.
மலேசிய சுற்றுலா தூதராக உங்கள் நியமிக்கப் போவதாக சொல்லப்படுவது பற்றி? என கேள்வி எழுப்பியபோது, 'நோ.. அவை வெறும் வதந்திகள்தான். உண்மையில்லை," என்றார் ரஜினி.


Click it and Unblock the Notifications











