குற்றம் கடிதல் இயக்குநருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்
சென்னை: குற்றம் கடிதல் படத்துக்கு தேசிய விருது கிடைத்ததற்காக, அதன் இயக்குநர் பிரம்மனுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்.
திரைத்துறையில் நல்ல விஷயங்கள் எது நடந்தாலும், தேடிப் போய் பாராட்டுபவர் ரஜினி. நல்ல படங்களை தவறாமல் பார்த்து, அதன் படைப்பாளிகளுக்கு உற்சாகம் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சமீபத்திய தேசிய விருது அறிவிப்பில், குற்றம் கடிதல் படம் சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்டிருந்தது.
இதை அறிந்த ரஜினிகாந்த், உடனடியாக அந்தப் பட இயக்குநர் பிரம்மனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து இயக்குநர் பிரம்மன் தனது பேஸ்புக் பக்கத்தில், "ஓ மை காட்.. சூப்பர் ஸ்டார் ரஜினி சார் எனக்கு தொலைபேசியில் வாழ்த்துக் கூறினார். தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படத்தை விரைவில் அவர் பார்க்கவிருக்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர்கள் ஜே சதீஷ்குமார் மற்றும் கிறிஸ்டிக்கும் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜே சதீஷ்குமார் கூறுகையில், "இந்திய திரையுலகின் தலைசிறந்த கலைஞர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் திறமைசாலிகளை கண்டறிந்து பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதனால்தான் அவர் என்றும் சூப்பர் ஸ்டார்," என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











