மகள் செளந்தர்யா உருவாக்கிய ஆப்பை அறிமுகம் செய்த ரஜினி
சென்னை : டெல்லியில் இன்று காலை நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு, ரஜினிக்கு வழங்கினார்.
இந்த விழாவில் ரஜினியின் குடும்பத்தினர், இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே விழாவில் ரஜினியின் மருமகன் தனுஷிற்கு அசுரன் படத்திற்காக சிறந்த துணைநடிகர் விருது வழங்கப்பட்டது.

செளந்தர்யாவின் ஆப்
இதைத் தொடர்ந்து லேட்டஸ்டாக இளைய மகள் செளந்தர்யா விசாகன் உருவாக்கிய சோஷியல் மீடியா ஆப்பை ரஜினிகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். குரல் வழியாக தகவல்களை அனுப்பும் Hoote என்ற ஆப்பை தான் செளந்தர்யா உருவாக்கி உள்ளார். இந்த தகவலை ஏற்கனவே ரஜினி தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார்.

ஸ்பெஷல் நாள்
அக்டோபர் 25 ம் தேதி இரண்டு காரணங்களுக்காக எனது வாழ்க்கையின் ஸ்பெஷலான நாள். ஒன்று எனக்கு தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மற்றொன்று எனது மகள் செளந்தர்யா உருவாக்கிய புதிய சோஷியல் மீடியா ஆப்பை அறிமுகம் செய்வது என குறிப்பிட்டிருந்தார். அதன்படி இன்று மாலை 4 மணிக்கு இந்த ஆப்பை ரஜினி அறிமுகம் செய்து வைத்தார்.

அறிமுகம் செய்த ரஜினி
தனது தந்தையின் குரல் தான் இந்த ஆப்பை தான் உருவாக்க ஆரம்பமாக இருந்தது என கூறி இருந்தார் செளந்தர்யா. இதைத் தொடர்ந்து இரண்டு வாய்ஸ் நோட்களை இந்த ஆப் மூலம் அனுப்பி, ஆப்பை அறிமுகம் செய்து வைத்தார் ரஜினி. Hoote ஆப்பின் லிங்கை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரஜினி, அதோடு, உலகிற்கான இந்தியாவின் முதல் வாய்ஸ் அடிப்படையிலான சோஷியல் மீடியா ஆப் என குறிப்பிட்டுள்ளார்.

முதல் குரல் பதிவில் வாழ்த்து
இதில் முதல் வாய்ஸாக, இந்த ஆப்பை உருவாக்கிய மகளுக்கு வாழ்த்து தெரிவித்து முதல் பதிவை பகிர்ந்தார். இந்த ஆப் எழுத, படிக்க முடியாதவர்களுக்கு கூட பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார் ரஜினி.

விருது அர்ப்பணிப்பு
இரண்டாவது வாய்ஸ் நோட்டில், மத்திய அரசால் தனக்கு வழங்கப்பட்ட இந்திய சினிமாவின் கெளரவம் மிக்க விருதான தாதாசாகிப் பால்கே விருதினை தனது குரு கே.பாலச்சந்தர், தனது மூத்த சகோதரர் சத்யநாராயணா கெய்க்வாட், எனது நண்பரும் பஸ் டிரைவருமான ராஜ் பகதூர், எனது படங்களின் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள், உடன் பணியாற்றிய நடிகர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக துறையினர், எனது ரசிகர்கள் மற்றும் அன்பான தமிழ் மக்கள் ஆகியோருக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











