ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஏப்ரல் 2-ம் தேதி சந்திக்கிறார் ரஜினி?
சென்னை: ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சென்னைக்கு வரும் ஏப்ரல் 2-ம் தேதி அழைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை ரஜினிகாந்த் சந்தித்து அவசர ஆலோசனை நடத்துகிறார் என்று தகவல் வெளியானது.
ஆனால் 'சில நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் ரஜினி அவர்களைச் சந்திக்கும் திட்டம் ஏதுமில்லை' என்றும் ராகவேந்திரா மண்டப வட்டாரங்கள் தெரிவித்தன.

மாவட்ட ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் பலருக்கும் இந்த கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
முன்பெல்லாம் தனது ரசிகர்களை அடிக்கடி சந்தித்து, படமெடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தேவையற்ற அரசியல் சர்ச்சைகளைத் தவிர்க்க கடந்த 10 ஆண்டுகளாக இத்தகைய சந்திப்புகளைக் குறைத்துக் கொண்டார்.
ஆனாலும் தனது பிறந்த நாளில், புத்தாண்டு தினங்களில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன்னால் திரளும் ரசிகர்களை பார்த்து வணக்கம் தெரிவித்து செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தங்களை அழைத்து பேசும்படி ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் அது ஏற்கப்படாமலே இருந்தது.
குறிப்பாக கடந்த சில வாரங்களாக, ரஜினியைச் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு மண்டபத்தில் உள்ள ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதைத் தொடர்ந்துதான் முதல் கட்டமாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை மண்டபத்தில் உள்ள பொறுப்பாளர்கள் சந்தித்துப் பேசவிருப்பதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











