மூன்று பெக் அடித்தும் போதை ஏறவில்லை... கமல் நடிப்பை பாராட்டிய ரஜினி
சென்னை: நடிகர் கமல் ஹாசன் வழக்கம்போல பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் தன்னுடைய நேர்த்தியான அணுகுமுறையை காட்டி வருகிறார்.
இன்னொரு பக்கம் இவருடைய சக நடிகரான ரஜினிகாந்த் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டே அடுத்த படங்களுக்கான கதைகளையும் கேட்டு வருகிறார்
இந்நிலையில் பல தருணங்களில் கமல் ஹாசனை பாராட்டியுள்ள ரஜினி வித்தியாசமாக ஒரு முறை பாராட்டியதைப் பற்றி இயக்குநர் பி.வாசு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

கமல் ரெஃபெரன்ஸ்
ரஜினி தன்னுடைய பல படங்களில் கமலை குறிப்பிட்டு வசனங்கள் பேசி நடித்திருப்பார். ரஜினி வயதில் மூத்தவர் என்றாலும் திரைப்படத் துறையை பொறுத்தவரை கமல்தான் சீனியர். அதனால், கமல் எனது கலை உலக அண்ணா என்று வெளிப்படையாகவே பாராட்டியிருக்கிறார் ரஜினி. கழுவிட்டு வந்தா சும்மா கமல் ஹாசன் மாதிரி இருப்பேன் என்று திரையில் பேசுவது மட்டுமின்றி எந்திரன் படப்பிடிப்பில் சங்கர் அதிக டேக் வாங்கியபோது,"சார் கமல மனசுல வச்சுட்டு கதை எழுதுனீங்க சரி, ஆனா இப்ப நடிக்கிறது ரஜினி. கமல்கிட்ட எதிர்பார்க்கிற நடிப்பை என்கிட்ட எதிர்பாக்காதீங்க" என்று திரைக்குப் பின்னாலும் அவரை குறிப்பிட்டு பாராடியிருக்கிறார்.

அபூர்வ சகோதரர்கள்
இப்போது பான் இந்தியன் திரைப்படம் என்று பல திரைப்படங்களை கூறுகிறார்கள். ஆனால் 1980-களிலேயே இந்தியா முழுக்க மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது அபூர்வ சகோதரர்கள். காரணம் அது போன்ற ஒரு கதாபாத்திரத்தை அதுவரை இந்திய சினிமா பார்த்ததில்லை. அந்தப் படத்தை இரவு காட்சி பார்த்துவிட்டு படம் முடிந்தவுடன் இரண்டு மணிக்கு கமல் ஹாசனை பார்க்க வேண்டும் என்று தனது மனைவிய லதாவிடம் கூறினாராம். நள்ளிரவு ஆகிவிட்டது இப்போது எதற்கு என்று லதா கூறியும், அதனை கேட்காத ரஜினி நேரடியாக கமல் ஹாசன் வீட்டிற்குச் சென்று அவரை கட்டிப்பிடித்து,"நீங்கள் சாகா வரம் பெற்று விட்டீர்கள் கமல்" என்று பாராட்டினாராம் ரஜினி.

ஹே ராம்
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் புதிதாக வெளிவரும் நல்ல படங்களை பார்த்து அதன் இயக்குநர் மற்றும் நடிகர்களை நேரில் அழைத்து வாழ்த்துவார் ரஜினி. அப்படி சில சமயம் நல்ல படங்கள் வராத சூழ்நிலையில் சில பழைய படங்களை மீண்டும் மீண்டும் விரும்பி பார்ப்பாராம். அப்படி தான் அடிக்கடி விரும்பி பார்ப்பது திருவிளையாடல் மற்றும் ஹேராம் திரைப்படங்கள்தானாம். ஹேராம் திரைப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதில் ஒரு புதிய விசயம் தனக்கு தென்பட்டதாகவும் ரஜினி ஒரு நிகழ்வில் பேசியிருப்பார்.

நாயகன்
நாயகன் வெளியான அதே நாளில்தான் மனிதன் திரைப்படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களில் எது வசூல் அதிகம் என்ற பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும், இன்றுவரை பேசக் கூடிய படமாக நாயகன் இருக்கிறது. ஒருமுறை இயக்குநர் பி.வாசு ரஜினியிடம் பேசும் பொழுது, நாயகன் படம் போல் நீங்கள் இதுவரை ஒரு படம் நடிக்கவே இல்லை என்று பி.வாசு கூறினாராம். அதற்கு ரஜினி, உங்களுக்கு ஒன்று தெரியுமா அந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து மூன்று பெக் அடித்தேன், போதை ஏறவே இல்லை. உடனே கமலுக்கு ஃபோன் போட்டு,"கமல் மூன்று பெக்கை விட வேலு நாயக்கர் போதை அதிகமா இருக்கு" என்று தான் பாராட்டியதாக ரஜினி கூறினாராம்.


Click it and Unblock the Notifications











