எனக்கு பிடித்த செஸ் விளையாட்டு...போட்டோவுடன் ரஜினி போட்ட ட்வீட்
சென்னை : சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா களமிறக்குகிறது.

1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையை கொண்டதாகும்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தின் சென்னையில் நடைபெறுகிறது. இந்தியாவில் சென்னையில்தான் 26 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். பிற மாநிலங்களில் ஒற்றை இலக்க அளவிலேயே கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கின்றனர். செஸ் போட்டிகளில் இந்தியாவில் தமிழகம் சிறந்து விளங்குவதன் காரணமாக சென்னையில் இந்த போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக பிடே அறிவித்துள்ளது.

சென்னையிலும் காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாலங்களில் செஸ் போர்டில் உள்ள கருப்பு-வெள்ளை நிறங்கள் வரையப்பட்டுள்ளன. செஸ் போட்டிகளின் காய்கள் வடிவிலான உருவங்களும் ஆங்காங்கே பெரிய அளவில் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றன. செஸ் விளையாட்டின் குதிரை காய் இந்த போட்டியின் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டுள்ளன. இது தம்பி என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் செஸ் விளையாடுவது போன்ற பழைய போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர், எனக்கு பிடித்த இன்டோர் கேம் செஸ்...செஸ் போட்டியில் பங்கேற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...God bless என குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், ஐ லவ் யூ தலைவா என பலர் கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலர், வாங்க தலைவா, ஆன்லைனில் ஒரு கேம் ஆடுவோம் என கூப்பிட்டுள்ளனர். ரஜினி பழைய போட்டோவை பகிர்ந்ததால் வேலைக்காரன் பட ஷுட்டிங்கின் போது ரஜினி, கேஆர் விஜயாவுடன் செஸ் விளையாடிய பழைய போட்டோவையும் சிலர் பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











