நெருப்புடா... நெருங்குடா... கபாலிக்காக ரஜினி எழுதிய வரிகள்!
சென்னை: கபாலி படத்தின் ட்ரைலரில் இடம் பெற்று கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பப் பாடலாகிலவிட்ட நெருப்புடா... பாடலில் இடம்பெறும் வரிகளை எழுதியவர் நடிகர் ரஜினிகாந்த் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது ரஜினி ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, ரஜினிகாந்த் தன் படங்களில் பல நிலைகளில் பங்களிப்பு செய்கிறார். ஆனால் அதையெல்லாம் டைட்டில் போட்டு சொல்லிக் கொள்வதில்லை.
வள்ளி படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ரஜினி எழுதினார். பாஷாவில் இடம் பெறும் நான் ஒரு முறை சொன்னா நூறுவாட்டி சொன்ன மாதிரி என்ற புகழ்பெற்ற வசனத்தை உருவாக்கியவர் ரஜினிதான்.
அடுத்து பாபா படத்தின் கதை திரைக்கதையை ரஜினிதான் உருவாக்கினார். பாபாவில் தலைப்பாகை கட்டிக் கொள்ளும் மேனரிசம், பாபா முத்திரை, யோகா பற்றிய நீண்ட வசனம் போன்றவையெல்லாம் ரஜினியின் ஐடியாக்கள்தான் என்பதை படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவே தனது புத்தகத்தில் சொல்லியிருப்பார்.
அதன் பிறகு வந்த சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற லகலகலக... ரஜினியின் ஐடியாதான்.
2014-ல் வெளியான கோச்சடையான் படத்தில் இடம்பெற்ற 'மாற்றம் ஒன்றுதான் மாறாதது...' பாடலில் இடம்பெறும் வசனங்களை வைரமுத்துவுடன் சேர்ந்து உருவாக்கினார். ஆனால் ரஜினியின் பெயர் ஒரு பாடகராகத்தான் அதில் இடம்பெற்றது.
இப்போது கபாலிக்காக நெருப்புடா... நெருங்குடா என்ற பாடலின் வசனப் பகுதிகளை ரஜினி எழுதியுள்ளார். கபாலி படத்தின் பாடல்கள் லிஸ்டில் அந்தப் பாடலை எழுதியவர் ஸ்ரீரஜினிகாந்த் என்று குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











