ரொம்ப கஷ்டமா இருக்கு.. மின்சார கனவு நினைவுகளை ஷேர் செய்து இயக்குநர் ராஜிவ் மேனன் உருக்கம்
சென்னை: பிரபல ஒளிப்பதிவாளரான ராஜிவ் மேனன், இயக்குநராக அறிமுகமான மின்சார கனவு படத்தின் த்ரோபேக் புகைப்படங்களை பதிவிட்டு, எஸ்.பி. பால்சுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 1:04 மணிக்கு எம்.ஜி.எம் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
சென்னை, செங்குன்றம் அருகே உள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ரசிகர்கள் அஞ்சலி
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு மருத்துவமனையில் இருந்து வாகனம் மூலம் கொண்டு வரப்பட்ட எஸ்பிபி அவர்களின் உடலுக்கு பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் கூடி அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு அவரது உடல் நேற்று இரவு 10 மணி அளவில் கொண்டு வரப்பட்டது.

கண்ணீருடன்
காலை 4 மணி முதல் 6 மணி வரை பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. ரசிகர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றபடி எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். அதன் பின்னர், கூட்டம் அதிகரித்த காரணத்தால், கொரோனா பரவல் அச்சம் இருப்பதால், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டது.

பிரபலங்கள் இரங்கல்
நெருங்கிய உறவினர்கள் மற்றும் பிரபலங்களுக்கு மட்டுமே பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணிக்கு அவரது உடல் அந்த இடத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ரொம்ப கஷ்டமா இருக்கு
இயக்குநராக மின்சார கனவு படத்தில் அறிமுகமான ராஜிவ் மேனன், தனது முதல் படத்தில் எஸ்பி பாலசுப்ரமணியத்தை நடிகராக நடிக்க வைத்திருந்தார். மேலும், அந்த படத்தில் எஸ்பிபி பாடிய தங்கத் தாமரை மகளே பாடலுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில், மின்சார கனவு நினைவுகளை பகிர்ந்து ரொம்ப கஷ்டமா இருக்கு என பதிவிட்டுள்ளார்.

மின்சார கனவு நினைவுகள்
ஏவிஎம் தயாரிப்பில் எடுக்கப்பட்ட மின்சார கனவு படம் தொடர்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், எஸ்பிபி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் ராஜிவ் மேனன் அதனை தற்போது பகிர்ந்து மின்சார கனவு நினைவுகளை பகிர்ந்துள்ளார். பிரபுதேவா, அரவிந்த் சாமி, கஜோல் உள்ளிட்ட நடிகர்களும் உடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று தலைமுறை
எஸ்பிபியின் குரலை ஒரு போதுமே மறக்க முடியாது என்றும், எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என மூன்று தலைமுறை இசை கலைஞர்களின் இசையிலும் இளமை மாறாது ஒலித்த அந்த குரல் என்றுமே நம்முடன் இருக்கும் எனவும் இயக்குநர் ராஜிவ் மேனன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











