சீரியல் நடிகருடன் என் மகளுக்கு திருமணமா? சீறிய ராஜ்கிரண்.. உண்மையில் என்ன நடந்தது?
சென்னை: நடிகர் ராஜ்குமாரின் மகள் பிரியாவுக்கும் நாதஸ்வரம் சீரியல் நடிகர் முனீஸ்ராஜாவுக்கும் திருமணம் ஆனதாக செய்திகள் வெளியான நிலையில், அதுதொடர்பாக நடிகர் ராஜ்கிரண் நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில் பிரியா என் மகளே இல்லை என்றும் அவர் என் வளர்ப்பு மகள் தான் எனக்கூறியிருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ப. பாண்டி படத்தில் வயதான காலத்திலும் காதல் வரும் என நடித்த ராஜ்கிரணே காதல் திருமணத்துக்கு எதிராக உள்ளாரே என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சீரியல் நடிகருடன் திருமணம்
விருமன் படம் வரை ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் ராஜ்கிரணின் மகள் பிரியாவும் திருமுருகன் இயக்கி நடித்த நாதஸ்வரன் சீரியலில் காமெடியனாக நடித்த நடிகர் முனீஸ்ராஜும் காதலித்து வந்த நிலையில், அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்பதால் அதிரடியாக ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டனர். இந்த செய்தி காட்டுத் தீயாக பரவியதில், நடிகர் ராஜ்கிரண் கோபம் அடைந்துள்ளார்.

ராஜ்கிரண் விளக்கம்
"என் "மகளை", ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல்
என் பார்வைக்கு வந்தது. என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும், உண்மையை விளக்க வேண்டியது என் கடமை" என செம ட்விஸ்ட் உடன் ஒரு நீண்ட நெடிய விளக்கத்தையே கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் ராஜ்கிரண்.

என் மகளே கிடையாது
எனக்கு திப்பு சுல்தான் நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச்சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை "வளர்ப்பு மகள்" என்று
நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன்.

பணத்துக்காக எதையும் செய்வார்
முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர், என்னென்ன முறையிலோ அந்தப்பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த விசயம் என் காதுக்கு வந்ததும், அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்பது, எனக்குத்தெரிய வந்தது.

பணம் பறிப்பது
அவரது நோக்கம் பெண்ணை வைத்து வாழ்வதில்லை. எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள். இதையெல்லாம் பலவிதமாக விசாரித்து தெரிந்து கொண்ட நான், என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன். அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை.

அடம் பிடித்த வளர்ப்பு மகள்
அவரைத்தான் கட்டிக்கொள்வேன் என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டோம் என்றும், அந்தப்பெண் சொல்லியிருந்தார்.
அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக்கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி, அந்தப்பெண்ணிடம் அழுது மன்றாடி, எப்படியெப்படியோவெல்லாம் மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, " சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்" என்று சொல்ல, நாங்களும் மாப்பிள்ளை பார்த்துககொண்டிருந்தோம்.

4 மாதம் ஆகிவிட்டது
இந்த சூழ்நிலையில் தான், என் மனைவியின் தோழியான, "லட்சுமி பார்வதியை" பார்த்து விட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு, இந்தப்பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன, இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் தான், இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, என் மனைவி தான் இதற்கெல்லாம் காரணம்
என்பது போல், பொய் பொய்யாக பேசிக்கொண்டு திரிகிறது, இந்தப்பெண்.

கோபப்பட்டேன்
இந்த விசயத்தில் நான் கோபப்பட்டபோது கூட, என்னை சமாதானப்படுத்தி, அந்தப்பெண்ணுக்காக பரிந்து பேசி இன்று வரை அந்தப்பெண்ணுக்கு உறுதுணையாக நிற்பது, என் மனைவி மட்டும் தான். பெண்பிள்ளையை வளர்க்கும் ஒவ்வொரு தாயும், தன் பிள்ளையை நல்லபடியாக வாழவைக்க வேண்டுமே என்ற அக்கறையில், எப்படியெல்லாம் கண்காணிப்பாளோ, அப்படி ஒரு தாய் நடந்து கொள்வது, வாழ்க்கை அனுபவமில்லாத சிறு பிள்ளைகளுக்கு தவறாக தோன்றுகிறது...

சாதிபேதம் பார்த்திருக்க மாட்டேன்
என் வளர்ப்புப்பெண், ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன். ஆனால், தரங்கெட்ட, பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்து, தன் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம்... இதன் மூலம் நான் எல்லோரிடமும் சொல்லிக்கொள்வது, என்னவென்றால், என் பெயரைப்பயன்படுத்தி இவர்கள் உங்களை எந்த வகையிலாவது அணுகினால்,
அதனால் ஏற்படும் எந்தப்பிரச்சினைக்கும் நான் பொறுப்பல்ல, என்பது தான்.

பெயரை பயன்படுத்தக்கூடாது
இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காகப்பயன்படுத்தினாலும்
சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சீரியல் நடிகர், தன் குள்ளநரித்தனங்களால், என் வளர்ப்புப்பெண்ணிற்கு கணவனாகிக்கொள்ளக்கூடும். ஆனால், எந்தக்காலத்திலும் எனக்கு மருமகனாக முடியாது. இன்றிலிருந்து, இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நேர்மையும், சத்தியமுமே என்றும் வெல்லும்." என விளக்கம் கொடுத்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.


Click it and Unblock the Notifications











