என் ராசாவின் மனசில இரண்டாம் பாகம்.. மீனாவிடம் பேசுகிறார் ராஜ்கிரண்!
ராஜ்கிரண் நடித்து, தயாரித்து பெரும் வெற்றிப் பெற்ற என் ராசாவின் மனசில படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகிறது. இந்தப் படத்தில் ராஜ்கிரண் - மீனாவே மீண்டும் நடிக்கப் போகிறார்களாம்.
இதற்காக மீனாவிடம் பேச்சு நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ் கிரண் - கஸ்தூரிராஜா
தயாரிப்பாளராக இருந்த ராஜ்கிரண், என் ராசாவின் மனசிலே மூலம் நடிகராக அறிமுகமானார். 1991-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை கஸ்தூரிராஜா இயக்கியிருந்தார். ஆனால் படம் வெளியான பிறகு, படத்தை இயக்கியவர் ராஜ்கிரண்தான் என்ற சர்ச்சை எழுந்தது.

இளையராஜா
இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையும் பாடல்களும் ரசிகர்களை மயக்கின. பாரிஜாத பூவே, குயில் பாட்டு, பெண்மனசு ஆழமென்று, சோலைப்பசுங்கிளியே போன்ற பாடல்களில் மக்கள் கிறங்கினர். இந்தப் படத்தின் இசைத்தட்டுகள் (ரிகார்டுகள்) விற்பனையில் புதிய சாதனைப் படைத்ததால், இளையராஜாவுக்கு ப்ளாட்டினம் டிஸ்க் வழங்கி கவுரவித்தார் ராஜ்கிரண்.

வடிவேலு
வடிவேலுவுக்கு வாழ்க்கை தந்த படம் இது. படத்தில் அவர் வேடத்தின் பெயரும் வடிவேலுதான். அத்துடன், "போடா போடா புண்ணாக்கு' என்ற பாடலை ராஜ்கிரணுடன் இணைந்து பாடியிருந்தார்.

கவுண்டர் - செந்தில்
வடிவேலு அறிமுகமான படம் என்றாலும், நகைச்சுவையில் கோலோச்சியவர்கள் கவுண்டமணியும் செந்திலும்தான். இருவரும் சேர்ந்து வடிவேலுவை ஓட்டியிருப்பார்கள்.

வெள்ளி விழா
கிராமத்து பின்னணியில் உருவான இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது. இதைத் தொடர்ந்து அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களை இயக்கி வெற்றி கண்டார் ராஜ்கிரண்.

இரண்டாம் பாகம்
இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார் ராஜ்கிரண். என் ராசாவின் மனசிலே படத்தில் மாயாண்டியும், சோலையம்மாவும் இறந்து போனது மாதிரி படம் முடிக்கப்பட்டிருந்தது. அப்போது இரண்டாம் பாக ஐடியா அல்லது ட்ரெண்டே இல்லாமலிருந்தது.

இறக்காமல் இருந்திருந்தால்...
இரண்டாவது பாகத்தில் அவர்கள் இருவரும் இறக்காமல் இருந்திருந்தால் எப்படியிருக்கும் என்பது மாதிரி கதை அமைக்கப் போகிறாராம் ராஜ்கிரண். இதிலும் நாயகனாக ராஜ்கிரண் தான் நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த மீனாவையே நடிக்க பேசி வருகிறார்களாம்.

ராஜாவைத் தவிர வேறு யார்?
இந்தப் படத்துக்கு இசை? வேறு யார்... இளையராஜாவேதான். விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியிட்டு படத்தைத் தொடங்கப் போகிறாராம் ராஜ்கிரண்.


Click it and Unblock the Notifications











