போதைப் பொருள் விவகாரம்... ரகுல் ப்ரீத் சிங், ராணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
டெல்லி : 2017 ல் தொடரப்பட்ட போதைப் பொருள் விவகாரம் தொடர்பான வழக்கில் ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி, ரவி தேஜா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் 12 பேர் மற்றும் தெலுங்கு திரையுல டைரக்டர்கள் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய இந்த வழக்கை அமலாக்கத்துறை மீண்டும் கையில் எடுத்துள்ளது டோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
டைரக்டர் பூரி ஜெகன்நாத் ஆகஸ்ட் 31 ம் தேதியும், ரகுல் ப்ரீத் சிங் செப்டம்பர் 6 ம் தேதியும், ராணா செப்டம்பர் 8 ம் தேதியும், ரவி தேஜா செப்டம்பர் 9 ம் தேதியும் விசாரணைக்கு ஆஜராக சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்மைத் கான் நவம்பர் 15 ம் தேதி ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சார்மி கவுருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் போதைப் பொருட்கள் புழக்கம் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் 2017 ல் விசாரணையை துவக்கிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர் கெல்வின் என்பவரை முதலில் கைது செய்தனர். ஐதராபாத்திற்கு போதைப் பொருட்களை கடத்தி வந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு விற்பனை செய்து வருவதாக கெல்வின் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.
இதனால் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அடுத்தடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் டைரக்டர் பூரி ஜெகன்நாத், நடிகர்கள் தருண், ராணா, ரவி தேஜா, நடிகைகள் சார்மி, ரகுல் ப்ரீத் சிங், முமைத் கான் உள்ளிட்ட 12 பேருக்கு போதைப் பொருள் பயன்படுத்தியதில் தொடர்பு இருப்பாக தெரிய வந்தது. தொடர்ந்து இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட மொத்தம் 62 பேரிடம் முடி, ரத்தம், நகம் உள்ளிட்ட மாதிரிகள் தடயவியல் ஆய்விற்காக சேகரிக்கப்பட்டது. ஆனால் தனது விருப்பமின்றி பரிசோதிக்கக் கூடாது என சார்மி தாக்கல் செய்த மனுவை ஐதராபாத் ஐகோர்ட் ஏற்றது.
தடை செய்யப்பட்ட ஆன்லைன் தளத்தின் மூலம் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், வெளிநாடுகளில் இருந்து கொரியர் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக காஜல் அகர்வாலின் உதவியாளர், நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என 20 பேர் வரை ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இதில் நிதி மோசடியும் நடந்துள்ளதாக கூறப்படுவதால் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணைக்கு பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை வளையத்திற்குள் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட 62 பேர் சேர்க்கப்பட்டிருந்தாலும், இதுவரை யார் மீதும் குற்றப்பத்திரிக்கை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. பிரபலங்கள் யாருக்கும் போதை பொருள் கடத்தலிலோ அல்லது போதைப் பொருள் பயன்படுத்துவதிலோ தொடர்பு இருப்பதாக இதுவரை யாருடைய பெயரும் சேர்க்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications











