ருத்ரமாதேவி விவகாரத்தில் ராம் சரணைக் குறை கூற முடியாது - அல்லு அர்ஜுன்
ஹைதராபாத்: ருத்ரமாதேவி பட விவகாரத்தில் ராம் சரணையோ புரூஸ்லீ படத்தின் தயாரிப்பாளரையோ குறை கூறமுடியாது என்று தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
வரலாற்றுத் திரைப்படமாக வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ருத்ரமாதேவி, இயக்குனரான குணசேகரே இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

ருத்ரமாதேவி தற்போது நல்ல வசூலை ஈட்டினாலும் இன்னும் 3 தினங்களில் வெளியாகும் ராம் சரணின் புரூஸ்லீயால் ருத்ரமாதேவியின் வசூல் பாதிக்கக் கூடும் என்று தயாரிப்புத் தரப்பு கருதுகிறதாம்.
அதனால் ராம் சரணின் நடிப்பில் உருவாகியிருக்கும் புரூஸ்லீ படத்தின் வெளியீடை தள்ளி வைக்குமாறு ருத்ரமாதேவியின் தயாரிப்பாளரும், இயக்குனருமான குணசேகர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ஏற்கனவே படத்தின் வெளியீடை அறிவித்து விட்டோம் இப்போது படம் தள்ளிப் போனால் நிறைய பிரச்சினைகள் ஏற்படும் என்று புரூஸ்லீ படக்குழுவினர் படத்தை தள்ளி வெளியிட மறுத்து விட்டனர்.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இதுவரை எந்தக் கருத்தும் கூறாமல் அமைதியாக இருந்து வந்தார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் என்ன செய்யப் போகிறார் என்று ஒட்டுமொத்த தெலுங்கு தேசமும் ஆர்வத்துடன் காத்திருந்தது.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் இந்த விவகாரத்தில் முதன்முறையாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் "ருத்ரமாதேவி விவகாரத்தில் புரூஸ்லீ படத்தின் தயாரிப்பாளரை குறை கூறமுடியாது.
அவர்கள் முன்னதாகவே புரூஸ்லீ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து விட்டனர். ருத்ரமாதேவி 4 ம் தேதியே வெளியாக வேண்டியது சில காரணங்களால் தள்ளிப் போனது.
புரூஸ்லீ படத்தின் வெளியீட்டுத் தேதி தெரிந்துதான் ருத்ரமாதேவி தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டார்.தற்போது இரண்டு படமும் ஒன்றாக ஓடி தான் ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்காக புருஸ் லீ பட குழுவினரைக் குறை கூற முடியாது என கூறியுள்ளார்.
இரண்டு படங்களும் வருகின்ற 16 ம் தேதி தமிழில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











