சசிகலா வாழ்க்கைக் கதையை படமாக்குகிறார் 'விளம்பரப் பிரியர்' ராம் கோபால் வர்மா...?
சர்ச்சைக்குரிய பிரபலங்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் அல்லது கதைகளைத் தேடிப் பிடித்து படமாக்குவது விளம்பரப் பிரியர் ராம் கோபால் வர்மாவுக்கு ரொம்வே பிடித்த விஷயம். பைசா செலவில்லாமல் மீடியா பப்ளிசிட்டி கிடைக்கும் அல்லவா....
சந்தன வீரப்பன், ஆந்திர தாதா என நிஜ மனிதர்களின் வாழ்க்கையைப் படமாக்குவதாகக் கூறி ஏகப்பட்ட சர்ச்சைகளைக் கிளப்பிய ராம் கோபால் வர்மா, இப்போது கையிலெடுத்திருப்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியான சசிகலாவின் வாழ்க்கைக் கதையை.

இந்தக் கதையைப் படமாக்குவதில் ஏகத்துக்கும் ஆர்வம் காட்டி வரும் வர்மா, அதை ட்விட்டரிலும் தட்டி விட்டிருக்கிறார். "சசிகலா என்ற தலைப்பை எனது அடுத்த படத்துக்காக பதிவு செய்துள்ளேன். நம்பமுடியாத அதியுயர் கற்பனைத்தன்மை மிக்க ஒரு அரசியல்வாதியின் மிக நெருங்கிய தோழியின் கதை இது," என்று ஒரு ட்விட்டிலும், "ஜெயலலிதாஜி மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்தது தனது தோழி சசிகலாஜியிடம்தான். இந்தக் கதையை எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நேர்மையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். ஜெயலலிதாவை சசிகலாவின் கண்களின் மூலம் பார்ப்பது இன்னும் கவிதைத் தனமிக்கதாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.
ஆக.. பரபரப்புக் காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது..., படத்திலல்ல, நிஜத்தில்!


Click it and Unblock the Notifications











