'காந்தாரா' ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.. ரிஷப் ஷெட்டியை பாராட்டிய ராம் கோபால் வர்மா!
சென்னை: ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து அனைவரும் கொண்டாடிய 'காந்தாரா' திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'காந்தாரா சாப்டர் 1' படம் கடந்த வியாழக்கிழமை தியேட்டரில் வெளியானது. பான் இந்திய திரைப்படமாக வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா காந்தாரா சாப்டர் 1 படத்தை வெகுவாக பாராட்டி, படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி புகழ்ந்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான காந்தாரா திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டும் வகையில் இருந்ததால் படம் எந்த இடத்திலும் சோர்வடையாமல் விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக ரிஷப் ஷெட்டி சாமி வந்து ஆடும் காட்சியில் மெய்சிலிர்த்துவிட்டது. இந்த படத்திற்காக ரிஷப் ஷெட்டி கடுமையாக உழைத்துள்ளார். இப்படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்தது. கர்நாடகாவில் ரூ.26 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.13 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.5.5 கோடி, வெளிநாடுகளில் இதன் வசூல் ரூ.3 கோடியை வசூலித்திருந்தது. இரண்டாம் நாளான நேற்று, "காந்தாரா சேப்டர் 1" உலகம் முழுவதும் ரூ.45 கோடி வசூலித்து உலக அளவில் ரூ.105 கோடியை வசூலித்துள்ளது. படம் திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும், படம் வசூலை அள்ளி வருகிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப் ஷெட்டி புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்: ராம் கோபால் வர்மா தனது சமூக வலைத்தள பக்கத்தில்,காந்தாரா என்பது வெறும் ஒரு படம் மட்டுமல்ல. ரிஷப் ஷெட்டியால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய இயக்கம். அவர் ஒரு படைப்பை உருவாக்கவில்லை, ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். ஒருவரால் ஒரு திரைப்படத்தின் மூலம் இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை நினைத்துப் பார்க்கவே வியப்பாக உள்ளது. ரிஷப் ஷெட்டி ஒரு மனிதர் அல்ல, அவர் ஒரு அதியுயர் சக்தி. அவர் திரையுலகில் ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளார். அவரைப் போல் வேறு ஒருவரும் இல்லை. அவரது பணிகள் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும். ரிஷப் ஷெட்டியின் முந்தைய படைப்புகளையும், அவரது தனித்துவமான கதை சொல்லும் பாணியையும் வெகுவாக பாராட்டி ராம் கோபால் வர்மா. ரிஷப் ஷெட்டி ஒரு புதிய அலையை உருவாக்கி, பாரம்பரிய சினிமா விதிகளை அவர் தகர்த்துள்ளார் என ராம் கோபால் வர்மா வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
மிகப்பெரிய தாக்கம்: காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவையா, பிரமோத் ஷெட்டி, ப்ரகாஷ் துமினாட், ஹரிபிரசாந்த், நவீன் டீ பாடீல் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஹோம்பளே ப்லிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், அரவிந்த் காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜனீஷ் லோகேஷ் இசையமைத்துள்ளார். சமீபகாலமாக கன்னட படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், தாக்கத்தையும் உண்டாக்கி வருகிறது. கேஜிஎஃப் படத்திற்கு பிறகு கன்னட திரையுலகத்தை இந்திய திரையுலகினர் அதிகளவில் கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











