பேயாக மாறும் "சிவகாமி"... அப்டியே எல்லோரும் "ஷாக்" ஆக தயாராகுங்க பாஸ்!
ஹைதராபாத்: தனது கணவர் வம்சி கிருஷ்ணா இயக்கும் அடுத்த படத்தில் முதன்முறையாக பேய் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தனது அபாரமான நடிப்பால் தென்னிந்திய ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன். இன்னும் கூட ரம்யா கிருஷ்ணன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே அப்படத்திற்கு புதுவிதமான ஒரு கலர் உண்டாகி விடுகிறது.

படையப்பா படத்தில் நீலாம்பரியாக மாறி தெறிக்க விட்டவர், பாகுபலியில் அரசி சிவகாமியாக மாறி தனது நடிப்பால் அதிரடித்தார்.
இந்நிலையில் தனது அடுத்த படத்தில் முதல்முறையாக பேய் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கப் போவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகுபலி படத்திற்குப் பின்னர் இவரின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து விட்டது. இதனைக் கருத்தில் கொண்டு ரம்யா கிருஷ்ணனின் கணவர் வம்சி கிருஷ்ணா அவரைப் பேயாக மாற்றவிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு ‘ருத்ராக்ஷா' என்று பெயர் வைத்திருப்பதாகவும் இதில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து சமந்தா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தெரிகிறது.
படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்த பின்னர் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பாகுபலி 2 படத்தில் அரசி சிவகாமியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











