தனுஷ் சிவகார்த்திகேயன் மோதலில் புதிதாக இணைந்த சிம்பு
சென்னை: கோலிவுட்டில் தற்போது மும்முனைப் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் குறிப்பிட்ட பண்டிகை தினங்களில் மட்டுமே வெளியாக வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டளையால் ரம்ஜான் தினத்தன்று கோடம்பாக்கத்தின் இளம் நடிகர்கள் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினிமுருகன் படமும் , தனுஷின் நடிப்பில் வெளிவரும் மாரி படமும் ரம்ஜான் தினத்தன்று ஒரே நாளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது சிம்புவின் நடிப்பில் அனுமார் வாலாக நீண்டு கொண்டே சென்ற வாலு படமும் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என்று சிம்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் வெளியாவதால் கண்டிப்பாக இந்த முறை நம்பலாம் என கோலிவுட்டில் கூறுகின்றனர்.
ஒரே நாளில் மூன்று இளம் நடிகர்களின் படங்கள் வெளியாவதால் தியேட்டர்கள் தொடங்கி, வசூல் வரை பிரச்சினைதான் இந்த உண்மை தெரிந்தும் சம்பந்தப்பட்ட படநிறுவனங்கள் களத்தில் குதிப்பது ஆச்சரியமாக உள்ளது.
இதற்கிடையில் உலக நாயகன் கமல் நடிப்பில் ஜூலை மாதம் 3 ம் தேதி பாபநாசம் படமும், சரித்திரப் படமான பாகுபலி ஜூலை 10 தேதியும் வெளியாவதால் தியேட்டர்களை முழுக்க, முழுக்க இந்த இரு படங்களுமே ஆக்கிரமித்துக் கொள்ளும்.
இவ்வளவு சிகக்கல்கள் இருந்தும் படத்தை அந்த தேதியில் வெளியிடுகின்றனர் இந்த மூவரும், மோதலில் வெல்லப் போவது யார் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications