Sorry அஜித்.. இதை உங்ககிட்ட எதிர்பார்க்கல.. இலவச திட்டங்கள் குறித்து இவ்வளவு மோசமான கருத்தா உங்களுடையது?
சென்னை: நடிகர் அஜித் குமார் அண்மையில் அளித்த பேட்டி குறித்துதான் தமிழ் சினிமா ரசிகர்களும் இணையவாசிகளும் பரபரப்பாக பேசி வருகிறார்கள். அந்த பேட்டியில் அஜித் பேசியவற்றில் உள்ளபடியே சிலவற்றிற்கு ஃபயர் விடலாம் தப்பில்லை. ஆனால் அவர் அரசுகள் நிறைவேற்றி வருகிற இலவசத் திட்டங்கள் குறித்து போகிற போக்கில் விமர்சித்திருப்பது என்பது மேம்போக்கான மேட்டிமைத்தனம் நிறைந்த கருத்தாகத்தான் இருக்கிறது.
அரசுகள் நிறைவேற்றும் இலவசத் திட்டங்கள் குறித்து அவர் கூறுகையில், " மக்கள் எப்போதும் அரசுகளிடம் இருந்து இலவச திட்டங்களை எதிர்பார்த்துக் கொண்டே இருக்க கூடாது. எப்போதும் அரசுகளை நோக்கி கொடுங்கள், கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்க கூடாது. அரசுகள் அதற்குரிய பணத்திற்கு எங்கு போகும்? நிதியமைச்சர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது. ஒரு நாட்டை நிர்வகிப்பது உண்மையிலேயே சவாலான காரியம்" என்பதுதான்
அஜித் இப்படி பேசியிருப்பது முற்றிலும் அபத்தமானதாக உள்ளது என்று பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருவதைப் பார்க்க முடிகிறது. அதாவது, சில வலதுசாரி அரசியல்வாதிகள் தொடங்கி, மக்களிடம் பிரபலமாக உள்ள பலரும் பொதுவாகவே இலவசத் திட்டங்களை மிகவும் கொச்சையாக விமர்சித்த நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம் . அஜித் வலதுசாரி ஆதரவாளராகக்கூட இருக்கட்டும், அது அவரது விருப்பம். அதற்காக இலவசத் திட்டங்களை கண்மூடித்தனமாக விமர்சிப்பது என்பது கேள்விக்குரியது. ஒரு திட்டம் இலவசத் திட்டம் என்பதற்காக அவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்று இல்லை. ஆனால், அஜித் அதைத் தவிர்த்து விட்டு, லாஜிக்காக கூறுகிறேன் என்பது போல பேசியுள்ளது என்பது ஏற்கனவே தவறாக விமர்சிக்கப்படுவதற்கு பலம் சேர்ப்பதைப் போன்றது. தமிழ்நாடு போன்ற மாநிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக உள்ளது. அது கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் முன்னோடி மாநிலமாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்த இலவசத் திட்டங்கள் தான். மேலும் ஒரு அரசு என்பது மக்கள் நலனைத்தான் கவனத்தில் கொள்ளவேண்டுமே தவிர, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் படம் லாபத்தை ஈட்டியதா என்று கணக்கு பார்ப்பதைப் போல பார்க்க கூடாது.

தமிழ்நாடே முன்னோடி: தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அதிமுக மற்றும் ஆட்சியில் உள்ள திமுக, காமராஜரை முதலமைச்சராக கொண்ட காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளன. அவை அடிப்படை வசதிகளை உள்ளடக்கியதும் அதைக் கடந்ததும் தான். அவை பல மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளது. காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு, அதை தீவிரமாக நடைமுறைப்படுத்திய இரு திராவிடக் கட்சிகளும் சரி, இங்கிருந்து தொடங்கிய இந்த இலவசத் திட்டங்கள் என்பது பலவற்றிக்கு அடிப்படையாக இருந்துள்ளது.
கல்விக்கு முக்கியத்துவம்: அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச பாடநூல்கள் தொடங்கி, இலவச பஸ் பாஸ், சீருடை, சைக்கிள், மடிக்கணினி என இந்தத் திட்டங்கள் நீண்டு கொண்டு உள்ளது. கல்வியில், வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னோடியாக திகழ இத்திட்டங்கள் மிகவும் முக்கியமான பங்காற்றி உள்ளது. இன்றைய திமுக அரசு நிறைவேற்றி வரும் நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்த மாணவர்களும் அவர்களின் குடும்பமும் எந்த அளவுக்கு பயன் பெற்றுள்ளது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருந்தாலும், அந்த அத்தனை எடுத்துக்காட்டுகளும் அத்திட்டத்தின் தேவையை நாடுகிற குடும்பங்கள் உள்ளது என்பதற்கான சான்றுகள் தான். இலவச தொலைக்காட்சி தொடங்கி மிக்ஸி கிரைண்டர் வரை எனும் திட்டங்கள் வாக்குகளை கவர்வதைக் கடந்து, தாழ்வு மனப்பான்மையை உடைக்கிற, சுயமரியாதையை விட்டுக் கொடுக்க கூடாது என்று அரசுகள் எடுத்த முடிவுகள். இந்த இலவசத் திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா?

இலவச மின்சாரம்: அதேபோல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற ஒரு திட்டத்தை நிறைவேற்றியதால் விவசாயிகள் இப்போதும் நம்பிக்கையாக விவசாயம் செய்து வருகிறார்கள். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு கட்டணம் வசூலித்திருந்தால், இன்றைக்கு விளைபொருட்களின் விலையில் அதன் தாக்கம் எந்த அளவுக்கு இருந்திருக்கும், அதை சாமானிய மக்களால் அந்த பொருளை வாங்கி பயன்படுத்தி இருக்க முடியுமா என்ற ஐயப்பாட்டை கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. ஒருவேளை அந்த இலவச மின்சாரத் திட்டம் இல்லையென்றால், ஏதோ ஒரு புள்ளியில் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி இருந்தால், உணவுப் பொருட்களுக்கு நாம் பெரும்பாலும் இறக்குமதியை நாடியிருக்க வேண்டிய சூழல் தான் ஏற்பட்டிருக்கும். இப்படி பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
திரைத்துறைக்கு: இதற்கு எல்லாவற்றிற்கும் பின்னால், மக்களின் வாக்குகளை கவர்வதைக் காட்டிலும், மக்களின் வாழ்க்கையை இலகுவாக்குகிற, நவீன படுத்துகிற, அடிமைத்தனத்தை உடைப்பதன் முயற்சிகள்தான். அத்திட்டங்களுக்கு பலன்களும் கிடைத்துள்ளன. இன்னும் பல எடுத்துக்காட்டுகளை பட்டியலிட முடியும். அதில் அஜித் குமார் சம்பந்தப்பட்ட திரைத்துறை சார்ந்த திட்டத்தை மட்டும் ஒன்றை நினைவு படுத்துவது சரியாக இருக்கும். அதாவது, படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. பல கோடிகளை செலவு செய்து படங்களை எடுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கேளிக்கை வரி என்பது செலுத்த முடியாத தொகை அல்ல, ஆனால் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருவதன் நோக்கம் என்பது கதைக்கு ஏற்ற பெயர், தமிழில் சூட்டப்பட வேண்டும் என்பதுதான். இலவசத் திட்டங்களின் அடிப்படை நோக்கங்களை, அத்திடங்களின் இலக்குகள் குறித்து ஆராயாமல், மேட்டிமைத்தனமாக அஜித் விமர்சித்திருப்பது ஏமாற்றத்தைத்தான் அளிக்கிறது.


Click it and Unblock the Notifications











