கன்னட நடிகர் சதீஷ் வஜ்ரா கொடூர கொலை...மைத்துனர் உள்ளிட்ட 2 பேர் கைது
பெங்களூரு : பிரபல கன்னட நடிகர் சதீஷ் வஜ்ரா தனது வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னட திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் சதீஷ் கொலைக்கு என்ன காரணம் என்பதையும் போலீசார் கண்டுபிடித்து, பல பதற வைக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தி உள்ளனர்.
சமீபத்தில் தவறான சிகிச்சையால் கன்னட டிவி நடிகை உயிரிழப்பு, பாடகர்கள் படுகொலை என அடுத்தடுத்து நடந்து வரும் நிலையில் மற்றொரு நடிகரும் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது அனைவரையும் பதற்றமடைய வைத்துள்ளது.

யார் இந்த சதீஷ் வஜ்ரா
கன்னட நடிகரான சதீஷின் வீடு மேற்கு பெங்களூருவில் ஆர்ஆர் நகர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ளது. 32 வயதாகும் சதீஷ், மாண்டியா பிரஜ்வால் தேவராஜ் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவர் சினிமா பிரபலங்களுக்கான சலூன் ஒன்றையும் நடத்தி வருகிறார். பல பிரபலங்கள் இவரின் வழக்கமான வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

சதீஷின் கொடூர கொலை
சதீஷின் வீட்டு கதவில் ரத்த கரைகள் இருப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், வீட்டின் உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் சதீஷின் வீட்டை போலீசார் திறந்து பார்த்த போது, அங்கு படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சதீஷ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவரின் வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்டுள்ளது.

சிக்கிய குற்றவாளிகள்
ஜுன் 18 ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், சதீஷின் மனைவியின் சகோதரர்கள் தான் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் சதீஷின் மைத்துனர் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலைக்கு இதுதான் காரணமா
சதீஷின் மனைவி கடந்த 7 மாதங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். அவரை சதீஷ் தான் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், மனைவியின் மரணத்திற்கு சதீஷ் தான் காரணம் என அவரது மனைவியின் சகோதரர்கள் சதீஷ் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதனால் சதீஷின் குழந்தையையும் அவர்கள் தங்களின் பாதுகாப்பில் வளர்ப்பதாக எடுத்துச் சென்றுள்ளனர்.

போலீஸ் சொன்ன தகவல்
குழந்தையை அடிக்கடி சென்று பார்த்து வந்த சதீஷ், குழந்தையை தன்னுடன் வைத்துக் கொள்ள பல வகைகளிலும் முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷின் மைத்துனர், அவரது நண்பருடன் சேர்ந்து சதீஷை கொலை செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் கன்னட திரையுலகம்
சதீஷின் இந்த திடீர் மறைவு பற்றிய தகவல் சோஷியல் மீடியாக்களில் பரவியதும் கன்னட திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











