தல 59.. ‘இவருக்காக’த் தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாராம் வித்யாபாலன்!
தயாரிப்பாளர் போனி கபூர் மீதுள்ள மரியாதையின் காரணமாகவே தல 59 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக வித்யா பாலன் கூறியுள்ளார்.
சென்னை: அஜித் படத்தில் தான் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 10ம் தேதி வெளியான அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம், பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை சுமார் 125 கோடி ரூபாய் வரை படம் வசூலித்துள்ளதாக, அப்படத்தை வெளியிட்ட கேஜேஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இது எது பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத அஜித், தனது அடுத்த படத்தின் வேலையில் திவீரமாக ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதம் முதல் அவர் அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்தியில் ஹிட்டான பிக் படத்தின் தமிழ் ரீமேக் தான் தல 59. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். நஸ்ரியா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் அஜித் நடிக்கிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் இது அவருக்கு முதல் படமாகும்.
இந்நிலையில் அஜித் படத்தில் தான் நடிப்பது ஏன் என்பது குறித்து வித்யா பாலன் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், அவர் கேட்டுக்கொண்டதால் தான் தல 59 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மும்பையில் பிறந்திருந்தாலும் வித்யாபாலனின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவர். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு படவாய்ப்புகள் ஏதும் இங்கு அமையவில்லை. இதனால் அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் கொடுத்து பாலிவுட் அங்கேயே தங்க வைத்து விட்டது. இந்த காரணத்தினாலேயே அடுத்து தமிழில் இருந்து சென்ற பட அழைப்புகளை அவர் ஏற்க இயலவில்லை.
இந்த சூழ்நிலையில் தான், அவர் அஜித்துடன் தல 59 படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











