Kantara Chapter 1: ஈஸ்வரா.. வெளியானது காந்தாரா சாப்டர் 1 டிரைலர்.. ரிஷப் ஷெட்டி கொலமாஸ்!
சென்னை: ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள காந்தாரா சாப்டர் 1 படம், ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை எழுதி இயக்கி, நடித்தும் இருந்தார் ரிஷப் ஷெட்டி. ரூபாய் 16 கோடி செலவில் கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் ரூபாய் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரீக்குவல் காந்தாரா சாப்டர் - 1 என்ற பெயரில் வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று அதாவது செப்டம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது.
காந்தாரா படத்தின் கதையை பொறுத்தவரையில், இது ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி தான் எடுத்ததாக ரிஷப் ஷெட்டி கூறினார். குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கெரடி என்ற தனது பழங்குடி கிராமத்தில் வன அதிகாரிக்கும் - பழங்குடி இன மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து தான் தான் இந்தப் படத்தில் படமாக்கியுள்ளதாக தெரிவித்தார். அதேபோல் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்றால் அது, பூஜா கோலா நடனம் தான். பழங்குடி மக்கள் தங்களது தெய்வத்தை பூஜா கோலா நடன முறையில் வழிபடுவது என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுத்தது.
இந்தப் படத்தின் அடுத்த பாகம் வெளியாகிறது என்று தகவல் வெளியானதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அடுத்த பாகம் என்றால் என்னவாக இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. காரணம் முதல் பாகத்திலேயே வில்லன் கொல்லப்பட்டுவிட்டார் எனும்போது, இரண்டாவது பாகத்தில் என்ன சொல்லப்போகிறார், கதை எப்படி நகரும் என்ற கேள்வி இருந்தது. ஆனால் இரண்டாவது பாகமாக நாங்கள் உருவாக்கவில்லை, படத்தின் ப்ரீக்குவல் கதையை சாப்டர் 1 என்று உருவாக்குகிறோம் என்று சொன்னதும் முன்பை காட்டிலும் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன்: டிரைலைரின் ஒவ்வொரு ஃப்ரேமும், ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு டயலாக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. இது படத்தின் மையக்கதாபாத்திரமான சிவாவின் குழந்தைப் பருவம் அல்லது அவரது மூதாதயரின் குழந்தைப் பருவத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மன்னர் காலத்து கதையாக படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. டிரைலரை சிவகார்த்திகேயன் தமிழில் ரிலீஸ் செய்துள்ளார்.

எப்படி இருக்கு: டிரைலரைப் பார்க்கையில் தத்ரூபமான சண்டைக் காட்சிகளால் படம் நிறைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. படத்தில் சில காட்சிகள் சி.ஜி.,யைக் கொண்டு உருவாக்கி உள்ளார்கள் என்பதையும் உணர முடிகிறது. முதல் பாகத்தில் தனது ஊரில் உள்ளவர்கள் தங்களது கடவுள் குறித்துச் சொல்லும் கதையைத்தான் படமாக எடுத்துள்ளார்களோ என்ற கேள்வியும் எழுகிறது. புராணக் கதையோடு தொடர்புடைய கதை என்றாலும் படத்தில் சில சினிமாடிக் காட்சிகள் இருப்பதையும் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் ரசிகர்களுக்கு தாறுமாறான ஒரு எக்ஸ்பீரியன்ஸைக் கொடுத்துவிடவேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக இருந்து படத்தை உருவாக்கி உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. டிரைலர் மொத்தம் 2 நிமிடங்கள் மற்றும் 56 நொடிகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











