ஃபெப்சி தலைவராக இயக்குநர் ஆர் கே செல்வமணி தேர்வு!
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) புதிய தலைவராக இயக்குநர் ஆர்கே செல்வமணி வெற்றிப் பெற்றார்.
இந்த அமைப்பின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
இந்த தேர்தலில் உரிமை மீட்பு அணி சார்பில் தலைவர் பதவிக்கு இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரும், சம்மேளன முன்னணி அணி சார்பில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவில் தலைவராக சம்மேள முன்னணி சார்பில் போட்டியிட்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தேர்வானார். செயலாளராக உரிமை மீட்பு அணி சார்பில் போட்டியிட்ட ஏ.சண்முகம் தேர்வாகியுள்ளார். மேலும், பொருளாளராக உரிமை மீட்பு அணி சார்பில் போட்டியிட்ட சுவாமிநாதன் தேர்வாகியுள்ளார்.
இவர்களுடன் இணைச் செயலாளர்களாக ராஜா, சபரிகிரீஷன், ரமணபாபு, தனபால், செந்தில்குமார் மற்றும் துணைத் தலைவர்களாக சந்திரன், ஸ்ரீப்ரியா, ஷோபி பவுல்ராஜ், அரசகுமார் (அனல் அரசு), ஸ்ரீதர் ஆகியோரும் தேர்வு பெற்றுள்ளனர்.
இவர்கள் பதவியேற்கும் விழா நாளை மாலை 6 மணி அளவில் சென்னையிலுள்ள ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெறவிருக்கிறது.
23 சங்கங்களை சேர்ந்த தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு மட்டுமே வாக்குரிமை உள்ளதால் அந்த சங்கங்களைச் சேர்ந்த 69 பேர் மட்டுமே ஓட்டு போட்டு நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர். தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் நடத்தி கொடுத்தார்.
இந்த தேர்தலில் தனிப்பட்ட ஒரு அணிக்கே வெற்றிவாய்ப்பு கிடைக்காமல் இரு அணிகளை சேர்ந்தவர்களும் நிர்வாக பொறுப்பிற்கு வந்துள்ளதை பெப்சி உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











