25 கோடி வியாபாரம் உள்ள நடிகர் 40 கோடி சம்பளம் கேட்கலாமா?- ஆர்கே செல்வமணி
சென்னை: நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும். ரூ 25 கோடி வியாபாரமுள்ள நடிகர் ரூ 40 கோடி சம்பளம் கேட்கும் நிலை இப்போது உள்ளது என்று ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி கூறினார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது இல்லை, என்று தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ள நிலையில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ் பட உலகம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் லாபம் பெற 'பெப்சி' தொழிலாளர்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். தயாரிப்பாளர்கள் எங்கள் எதிரிகள் இல்லை. அவர்களை முதலாளிகளாகவே பார்க்கிறோம். அனைவரும் ஒரே கப்பலில் பயணிக்கிறோம். யார் தவறு செய்தாலும் கப்பல் மூழ்கி விடும்.

தயாரிப்புத் துறையை காப்பாற்றும் பெரும் பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்பதை தொழிலாளர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். 'பெப்சி' தொழிலாளர்களை படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்த மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான பிறகு பட அதிபர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து பல்வேறு சலுகைகளை 'பெப்சி' வழங்கி இருக்கிறது. சிறு பட்ஜெட் படங்களுக்கு 40 சதவீதம் சம்பளத்தை குறைத்து இருக்கிறோம். இரவு 10 மணிவரை படப்பிடிப்புகள் இருந்தால் இரண்டு சம்பளம் வாங்கியதை ஒன்றரை சம்பளமாக குறைத்து இருக்கிறோம். அனைத்து படங்களுக்கும் பயணப் படியையும் குறைத்து இருக்கிறோம்.
சரியான திட்டமிடல், கேரவன் போன்ற ஆடம்பர செலவுகளை தவிர்த்தல், நடிகர்கள் சம்பளத்தை குறைத்தல் போன்றவை மூலம் 50 சதவீதம் வரை தயாரிப்பு செலவுகளை குறைக்க முடியும்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் படங்களுக்கு ரூ.90 கோடி வியாபாரம் உள்ளது. அவர் ரூ.15 கோடிதான் சம்பளம் வாங்குகிறார். தமிழில் ரூ.25 கோடி வியாபாரம் உள்ள ஒரு படத்தின் நடிகர் ரூ.40 கோடி சம்பளம் வாங்குகிறார். இதனால்தான் சினிமா தொழில் பாதிக்கிறது. நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்," என்றார்.
ஒரு நடிகருக்கு என்ன சம்பளம் தரவேண்டும் என்பதை தயாரிப்பாளர்தான் தீர்மானிக்கிறார், என விஷால் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











