Robo Shankar: ரோபோ சங்கர் மறைவு.. சிம்பு முதல் கார்த்தி வரை உச்ச நட்சத்திரங்கள் இரங்கல்
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் இன்று அதாவது செப்டம்பர் 18ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவால் மொத்த திரையுலகமும் சின்னத்திரை உலகமும் சோகத்தில் மூழ்கி உள்ளது. ரசிகர்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். இப்படி இருக்கையில், அவரது மறைவுக்கு நடிகர் சிம்பு, கார்த்தி, கமல்ஹாசன், டி. ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிம்பு தனது இரங்கல் பதிவில், ”நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் நடிகர் கார்த்தி தனது இரங்கல் பதிவில், “ காலப்போக்கில் தேர்வு செய்யப்படும் மோசமான தேர்வுகள் உடல் நலனை எப்படியெல்லாம் சிதைக்கிறது என்பதைப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது. மிகவும் திறமையான நடிகர் விரைவாகவே காலமாகிவிட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ரோபோ சங்கர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். இப்படி இருக்கையில் அவரது மறைவுக்கு கமல் தனது இரங்கலை கவிதையாக எழுதி உள்ளார். அதில், “ ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே” என்று எழுதி உள்ளார். நட்சத்திரங்கள் பலரும் ரோபோ சங்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











