Robo Shankar: ரோபோ மட்டும் இருந்திருந்தா.. இன்னைக்கு பேரனுக்கு காது குத்தி கிடா விருந்து போட்டிருப்பாரு!
சென்னை: ரோபோ சங்கர் மறைவு பலரையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. ஆஜானு பகவானைப் போல தோற்றம் இருந்தாலும், பழகுவதற்கு குழந்தையைப் போன்றவர் என்று பலரும் கூறுகிறார்கள். இப்படியான வார்த்தைகள் அவர் மறைந்துவிட்டார், அவர் புகழ் பாட வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல. ரோபோ உண்மையிலேயே ஒரு குழந்தையைப் போன்றவர்தான் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளது.
குறிப்பாக தனது குடும்பத்தினருடனும் உறவிகர்களுடனும் நண்பர்களுடனும் அவர் சேர்ந்து அடித்த அரட்டைகளும் ஜாலியான வீடியோக்களுமே அதற்கு சாட்சி எனலாம். ஒரு கலைஞனாக ரோபோ மறைந்தது ரசிகர்களுக்கு பெரும் இழப்பு என்றால், ஒரு மகளாக இந்திரஜாவுக்கு ரோபோவை பறிகொடுத்தது ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது மனைவி பிரியங்கா, ரோபோவின் தலைமாட்டில் நின்று கொண்டு, " சங்கா... அவங்க வந்திருக்காங்க, சங்கா இவங்க வந்திருக்காங்க.. சங்கா பேசுடா" என்று சொன்னதை பார்க்கும்போது மனம் கலங்காமல் இல்லை.

பத்திரிகை: ரசிகர்களுக்கு மிகவும் பிரியப்பட்ட பிரபலங்களின் குடும்பங்களில் ரோபோ சங்கரின் குடும்பத்திற்கு எப்போதும் முன்னணி இடம் உள்ளது. அதற்கு முக்கிய காரணமும் ரோபோ தான். அந்த குடும்பத்தின் ஆணி வேரான ரோபோவின் மறைவு என்பது மொத்த குடும்பத்தையும் மீளா துயரத்தில் தான் ஆழ்த்தியுள்ளது. இப்படியான நிலையில் இணையத்தில் தற்போது ரோபோ தனது பேரனுக்கு காது குத்தி, கிடா விருந்து வைக்கும் நிகழ்ச்சியை நேற்றும் இன்றும் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி காது குத்தும், 21ஆம் தேதி கிடா விருந்தும் வைக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இது தொடர்பான அழைப்பிதழ் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
காதுகுத்து: பலரும் இந்த அழைப்பிதழைப் பார்த்து, ரோபோ மட்டும் இருந்திருந்தா, இந்நேரம் அவ்வளவு பூரிப்புடன் பேரன் நட்சத்திரனுக்கு காது குத்தி தனது நண்பர்களையும் உற்றார் உறவினர்களையும் அழைத்து கிடா விருந்து போட்டிருப்பார். ஆனால் காலம் அவருக்கு அந்த கொடுப்பணையைக் கொடுக்கவில்லை. ரோபோ தான் நெருங்கிப் பழகியவர்களைக் கடந்து, அவரை ரசித்தவர்கள் மனதிலும் பெரும் இடத்தைப் பிடித்துள்ளார். அதனால்தான் அவரது மரணத்தை ரசிகர்களால் மிகவும் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதிர்ச்சி: இது மட்டும் இல்லாமல், 46 வயதில் அவர் மரணித்தது என்பது யாராலுமே எளிதில் தங்களது மனதில் அதை உறுதி படுத்திக் கொள்ளவில்லை. தகவலைக் கேட்டதும், பலரும் செய்தது, இது உண்மையா இல்லையா என்பதை பதறியடித்துக் கொண்டு விசாரித்தது தான். இது வதந்தியாக இருக்க வேண்டும் என்று பதறியவர்களும் உண்டு. ரணத்தோடே ரோபோ சங்கரை வழி அனுப்பி வைக்க வேண்டியதாகிவிட்டது. போய் வாருங்கள் கலை மாமணியே. கண்ணீரைத் தாங்கிய ரசிகர்களின் கண்கள் உங்களை வழி அனுப்பி வைக்கிறது.


Click it and Unblock the Notifications











