மூன்று நாட்கள் மூடப்பட்டதால் ரூ 60 கோடியை இழந்த திரையரங்குகள், மல்டிப்ளெக்ஸ்கள்!
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களாக திரையரங்குகள், மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் மூடப்பட்டதால் இதுவரை ரூ 60 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என இரட்டை வரி விதிப்புக்கு ஆளாகியுள்ளது தமிழ் திரையுலகம். இதுவரை காணாத பெரும் வரி விதிப்பாகும். இந்த நிலையை எதிர்த்து ஒட்டு மொத்த திரையுலகமே திரண்டு நிற்கிறது.
மாநிலத்தில் உள்ள 1050 திரையரங்குகளும் தொடர்ந்து 3வது நாளாக மூடப்பட்டுள்ளன. இதுவரை தமிழ் சினிமா சந்தித்திராத நெருக்கடி இது.

ரூ 60 கோடி
இந்த ஸ்ட்ரைக்கால் ரூ 60 கோடியை இழந்துள்ளனர் தியேட்டர்காரர்களும், மல்டிப்ளெக்ஸ் நடத்துபவர்களும். இந்த நஷ்டம், உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை விற்கும் கடைகளுக்கும் சேர்த்துதான்.

கேளிக்கை வரிதான் தலைவலி
திரைத்துறையினர் முக்கியமாக எதிர்ப்பது இதுவரை இல்லாமல் இருந்த 30 சதவீத கேளிக்கை வரி மீண்டும் திணிக்கப்பட்டிருப்பதைத்தான். ஜி.எஸ்.டி. வரி இப்போது இரண்டாம்பட்சம்தான். எனவே தமிழக அரசின் அறிவிப்பை பொறுத்தே தியேட்டர்கள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும்.

நாளையுமா?
தியேட்டர்கள் மூடப்பட்டதால் தமிழ்நாட்டில் தினமும் ரூ.15 முதல் ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே 3-வது நாளாக தியேட்டர் மூடப்பட்டுள்ளதால் ரூ.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளையும் மூடினால் இழப்பு தாங்க முடியாமல் போய்விடும்.

பாதிக்கப்பட்ட புதுப்படங்கள்
சமீபத்தில் திரைக்கு வந்த 10 புதிய படங்கள் சில நாட்கள் ஓடிய நிலையில் தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்த பட தயாரிப்பாளர்கள் தியேட்டர் ஸ்டிரைக்கை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். புதிய படங்களை வெளியிட முடியாமல் அவதிப்படுகின்றனர் தயாரிப்பாளர்கள்.


Click it and Unblock the Notifications