650 கோடிக்கு மேல் முறைகேடு.. சிக்கலில் நடிகை டாப்சி, அனுராக் காஷ்யப்.. வருமான வரித்துறை அதிரடி!
மும்பை: நடிகை டாப்சி மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 650 கோடிக்கும் மேல் முறைகேடு உள்ளதாக அதிகாரிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
நடிகை டாப்சி மற்றும் அனுராக் காஷ்யப்புக்கு சொந்தமான 28 இடங்களில் நேற்று திடீரென வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதனால் பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பு கிளம்பி உள்ளது.

வருமான வரித்துறை சோதனை
கோலிவுட், பாலிவுட் என நடித்து வரும் நடிகை டாப்சி மற்றும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் என 28 இடங்களில் நேற்று திடீரென அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

பல இடங்களில்
மும்பை, புனே மற்றும் டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் நடிகை டாப்சிக்கும் இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கும் சொந்தமான ஏகப்பட்ட இடங்கள் உள்ளன. அவற்றில் அதிரடியாக ஒரே நேரத்தில் 168 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர்.

650 கோடி முறைகேடு
பாலிவுட்டில் நடிகை டாப்சி அரை டஜன் படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் ஏகப்பட்ட முறைகேடான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே போல அனுராக் காஷ்யப்பிற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டிலும் முறைகேடுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு 650 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய வருமான வரித்துறை அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுரபி அலுவாலியா கூறியுள்ளது பாலிவுட்டை அதிர வைத்துள்ளது.

போலி பில்கள்
சுமார் 300 முதல் 350 கோடி வரை முறைகேடு நடத்தப்பட்டதற்கான ஆவணங்கள் முதற்கட்டமாக சிக்கியதாகவும், ஏகப்பட்ட போலி பில்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அனுராக் காஷ்யப்பின் பாண்டம் பிலிம்ஸ் மற்றும் சில பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களில் பொய்யான செலவு கணக்கு காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளதாம்.

மீண்டும் இணைந்து
மன்மர்ஜியான் திரைப்படத்தில் நடிகை டாப்சியை இயக்கிய அனுராக் காஷ்யப் மீண்டும் அவரை வைத்து தோபாரா எனும் படத்தை சமீபத்தில் தொடங்கினார். மேலும், நடிகை டாப்சியின் மடி மீது அமர்ந்தபடி இருக்கும் புகைப்படத்தையும் அனுராக் காஷ்யப் வெளியிட்டு வைரலாக்கிய நிலையில், தற்போது இருவருக்கும் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கை
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும், அவர்கள் கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து நடிகை டாப்சியும் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருவதாலே இந்த பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அனுராக் காஷ்யப் மற்றும் டாப்சியின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் மாஃபியா
பாலிவுட் முழுவதும் இது போல வருமான வரியை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஏகப்பட்ட பிரபலங்கள் உள்ளனர். ஒட்டுமொத்த பாலிவுட்டையும் தடை செய்யணும், போதைப் பொருள், வரி ஏய்ப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் பாலிவுட்டில் நடைபெற்று வருகிறது என்றும் நெட்டிசன்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











