என்ன இப்படி ஆகிப்போச்சே.. எஸ்.ஏ. சந்திரசேகர் அலுவலகம் ஜப்தி? போலீஸ் உதவியை நாடியிருக்காங்களாம்!
சென்னை: சட்டப்படி குற்றம் படத்துக்கான விளம்பர செலவு 76 ஆயிரம் ரூபாயை வழங்காததை அடுத்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய காவல் துறை உதவி கோரப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்.
அவரது மகன் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல கோடி சம்பளம் வாங்கி நடித்து வருகிறார். எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போதும் படங்களை இயக்கி வரும் நிலையில், இப்படியொரு சிக்கல் எப்படி ஏற்பட்டது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எஸ். ஏ. சந்திரசேகர் அலுவலகம் ஜப்தி
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்து, கடந்த 2011ம் ஆண்டு வெளியான சட்டப்படி குற்றம் திரைபடத்தின் விளம்பர செலவு 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்காததை அடுத்து, விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன், சென்னை அல்லிகுளம் 25வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

என்ன பிரச்சனை
திரைப்படத்தை விளம்பரப்படுத்த சந்திரசேகருடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், ஒப்பந்தப்படி தொகையை வழங்கவில்லை என்றும் கூறி, அதை வசூலித்து தரவேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பணத்தை செலுத்த உத்தரவிட்டும், தொகையை வழங்காததால் உத்தரவை அமல்படுத்தக் கோரி சரவணன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

போலீஸ் உதவி கேட்டு
இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், சந்திரசேகருக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் உள்ள ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நீதிமன்ற பணியாளர்கள், பொருட்களை ஜப்தி செய்ய சென்ற போது, சந்திரசேகரின் அலுவலக பணியாளர்கள் ஜப்தி செய்ய விடவில்லை எனக் கூறி, காவல் துறை உதவி வழங்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வீடும் அலுவலகமும்
சாலி கிராமத்தில் உள்ள அந்த வீட்டில் தான் நடிகர் விஜய் முன்னதாக வாழ்ந்து வந்தார் என்றும் வீடும், அலுவலகமும் ஒரே இடத்தில் உள்ள நிலையில், இப்படியொரு சிக்கலை எஸ். ஏ. சந்திரசேகர் ஏன் முன்பே தடுக்கவில்லை என்கிற கேள்வியும் வெறும் 76 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக வீடு ஜப்தியாகும் நிலை எப்படி ஏற்பட்டது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

விஜய் உதவுவாரா
அப்பா சந்திரசேகர் மற்றும் அம்மா சோபா சந்திரசேகர் சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் இருந்து அவர்களை காப்பாற்ற மகன் விஜய் உதவுவாரா? என்கிற கேள்விகளும் சமூக வ்லைதளங்களில் எழுந்துள்ளன. போலீஸார் உதவியுடன் அலுவலகம் விரைவில் ஜப்தி செய்யப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











