தலைப்பில் சாதிப் பெயர்... கமல் படத்தை நிறுத்துங்க! - போர்க்கொடி உயர்த்தும் அமைப்புகள்
சென்னை: சபாஷ் நாயுடு படத்தை வெளியிடத் தடை விதிக்குமாறு அருந்ததிய முன்னேற்ற பேரவை அமைப்பினர் கோயமுத்தூர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
கமல், ஸ்ருதி ஹாசன், பிரம்மானந்தம் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் படம் சபாஷ் நாயுடு.
இப்படத்திற்கு தலைப்பு வைத்ததில் இருந்தே பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சபாஷ் நாயுடு
சபாஷ் நாயுடு என்பது ஜாதிப்பெயரைக் குறிக்கிறது என்பதால் இப்பெயரை மாற்றும்படி பல தரப்பினரும் கமலை வலியுறுத்தி வருகின்றனர். படத்தின் தலைப்புக்கு ஏராளமான எதிர்ப்புகள் எழுந்தபோதும் இப்பெயரை மாற்றும் முடிவுக்கு கமல் இன்னும் முன்வரவில்லை.

ரேஸ்கோர்ஸ்
இந்நிலையில் மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. இப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை அமைப்பின் பொதுச்செயலாளர் இளங்கோவன், வக்கீல் ஜெயபால் ஆகியோர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின்போது சபாஷ் நாயுடு படத்தின் போஸ்டர்களைக் கிழித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கலெக்டர்
மேலும் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோவை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அதில் ''நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படத்துக்கு சபாஷ் நாயுடு என்று பெயரிட்டு விளம்பரங்கள் செய்து வருகின்றனர். இந்த தலைப்பு சமூக அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தை வெளியிட அனுமதி அளித்தால் சாதி பெயரில் படத்தலைப்புகளை கொச்சையாக அமைத்து திரைப்படங்களை உருவாக்கும் தவறான செயலுக்கு முன்னுதாரணமாக அமையும்.

தடை
ஆகவே இந்த படத்தின் தலைப்பை மாற்றும் வரையில், இந்த படத்தின் விளம்பரங்களோ அல்லது இந்த திரைப்படமோ வெளியிட தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.
சிம்புவின் பீப் பாடலுக்கு இவர்கள் இருவரும் வழக்குத் தொடர்ந்து சிம்பு, அனிருத்தை நேரில் ஆஜராக வைத்ததால் இந்த விவகாரமும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











