தலை அலங்காரத்துக்குப் பெயர் போன பழம்பெரும் நடிகை சாதனா மரணம்... 70களின் 'ஸ்டைல் ஐகான்'!
மும்பை: பழம்பெரும் இந்தி நடிகையான சாதனா உடல்நலக் குறைவினால் மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 74.
ஒன்றுபட்ட இந்தியாவின் கராச்சி நகரில் கடந்த 1941ம் ஆண்டு பிறந்தவர் சாதனா. பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பம் மும்பைக்கு குடி பெயர்ந்தது.
அதனைத் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்க்கையை அவர் தொடங்கினார்.

கோரஸ் பாடும் பெண்ணாக...
கடந்த 1955-ம் ஆண்டு ராஜ்கபூரின் 'ஸ்ரீ420' படத்தில் கோரஸ் பாடும் பெண்ணாக சாதனா நடித்தார். அப்போது அவருக்கு வயது 15. அதனைத் தொடர்ந்து மேடை நாடகங்களில் அவர் நடித்து வந்தார்.

துணை நடிகை...
அப்போது பத்திரிகையில் வெளியான சாதனாவின் புகைப்படத்தைப் பார்த்து தயாரிப்பாளர் சாஷதார் முகர்ஜி, தனது படக்குழுவில் துணை நடிகையாக அவருக்கு வாய்ப்பளித்தார்.

லவ் இன் சிம்லா...
அதனைத் தொடர்ந்து 1960-ம் ஆண்டு வெளியான 'லவ்-இன்-சிம்லா' படத்தில் நடித்தார் சாதனா. வெற்றிப் படமான அதில் சாதனாவின் தலை அலங்காரம் பெரிதும் பேசப்பட்டது.

சாதனா கட்..
சாதனா கட் என்று அவரது தலை அலங்காரம் பேசப்பட்டது. அதாவது தலை முடியை முன்நெற்றியில் அப்படியே பிரில் பிரிலாக விடுவதுதான் அந்த ஸ்டைல். பிற்காலத்தில் பல இந்தி நடிகைகள் இதைக் காப்பி அடித்து ஸ்டைலாகியுள்ளனர்.

முன்னணி நாயகி...
தொடர்ந்து தேவ் ஆனந்த், ராஜேந்திர குமார், திலீப் குமார், மனோஜ் குமார், சுனில் தத் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு மூலமும் பல வெற்றிப் படங்களைத் தந்தார்.

தைராய்டு பிரச்சினை...
இடையே சாதனாவுக்கு தைராய்டு பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா சென்று அவர் சிகிச்சைப் பெற்று திரும்பினார்.

வெற்றிப் படங்கள்...
சிகிச்சைக்குப் பின் அவர் நடித்த 'இந்தா குவாம்', 'ஏக் பூல் தோ மாலி', 'கீதா மேரா நாம்' ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படங்கள் சாதனா இயக்கத்தில் வெளியானவை.

காதல் திருமணம்...
பெற்றோர் எதிர்ப்பை மீறி, லவ் இன் சிம்லா படத்தை இயக்கிய ராம் கிருஷ்ண நய்யாரைக் காதல் திருமணம் செய்து கொண்டார் சாதனா. 1995-ல் ஆஸ்துமா கோளாறால் ராம் கிருஷ்ணா காலமானார். கடந்த 2002ம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது.

டிவி நிகழ்ச்சியில்...
அதனைத் தொடர்ந்து திரை உலகில் இருந்து விலகி இருந்த சாதனா, பாடகி ஆஷா போஸ்லேயின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ரன்பீர் கபூரின் டி.வி. நிகழ்ச்சியில் தோன்றினார்.

மரணம்...
அதன் பிறகு அடிக்கடி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார் சாதனா. இந்நிலையில் இன்று அவர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மரணம் அடைந்தார்.


Click it and Unblock the Notifications











