அனுஷ்கா நடிக்கும் ருத்ரமா தேவி படத்தில் சம்பளத் தகராறு... போலீசில் புகார்
அனுஷ்கா நடித்து வரும் சரித்திரப் படமான ருத்ரமா தேவியில் நடிகர்களுக்கு சம்பளம் சரியாகத் தராததால், பிரச்சினை போலீஸ் வரை போயுள்ளது.
தமிழ், தெலுங்கில் மெகா பட்ஜெட்டில் தயாராகி வருகிறது இந்தப் படம். இதில் அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யாமேனன், கேத்ரினா திரேஷா போன்றோரும் நடிக்கின்றனர்.
குணசேகரன் தயாரித்து இயக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் சம்பள விவகாரத்தில் நடிகர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் சுமன் தயாரிப்பாளர் குணசேகரன் மீது ஆந்திர மாநிலம் நம்பள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், "ருத்ரமாதேவி படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக தயாரிப்பாளர் குணசேகர் எனக்கு ரூ.5 லட்சம் செக் கொடுத்து இருந்தார். அதை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது. பிறகு குணசேகரை அணுகி பணத்தை கேட்டேன். அவரிடம் இருந்து பொறுப்பான பதில் வரவில்லை," என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











