தூம் 4: வில்லனாக மாறுகிறாரா சல்மான் கான்?
மும்பை: இந்திய ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களில் ஒன்றான தூம் படத்தின் 4 வது பாகம் விரைவில் தொடங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஜான் ஆப்ரகாம், ஹிருத்திக்ரோஷன், அமீர் கான் ஆகியோரைத் தொடர்ந்து 4வது பாகத்தில் ஹைடெக் வில்லனாக சல்மான் கான் நடிக்கவிருப்பதாக கூறுகின்றனர்.
இந்தத் தகவலை தூம் படங்களை வரிசையாகத் தயாரித்து வரும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.

தூம்
தூம் படத்தின் முதல் பாகம் ஜான் ஆப்ரஹாம், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா மற்றும் இஷா தியோல் ஆகியோரின் நடிப்பில் 2004ம் ஆண்டில் வெளிவந்தது. மோட்டார் பைக்குகளில் வந்து ஹைடெக் முறையில் கொள்ளையடிக்கும் வில்லனாக ஜான் ஆப்ரகாமும் அவரைப் பிடிக்கும் காவல் அதிகாரியாக அபிஷேக் பச்சனும் நடித்திருந்தனர்.11 கோடி செலவில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 72 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது.

தூம் 2
2 வருடங்கள் கழித்து 2006 ம் ஆண்டில் தூம் படத்தின் 2 வது பாகம் ஹிருத்திக்ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்தது. இந்தப் பாகத்தில் அபிஷேக் பச்சன், உதய் சோப்ராவுடன் இணைந்து பிபாஷா பாசு நடித்திருந்தார். பழைய திருடன் - போலீஸ் கதைதான் எனினும் தூம் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். இந்தப் படம் வெளிவந்த ஆண்டில் பாலிவுட்டின் அதிகம் வசூலித்த படங்களில் முதலிடத்தில் இருந்தது. இன்றளவும் பாலிவுட்டின் அதிகம் வசூலித்த படங்களில் தூம் 2, 7 வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 35 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 150 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்து பாலிவுட்டின் படா பிளாக் பஸ்டர்களில் ஒன்றாக மாறியது.

தூம் 3
தூம் 2 படத்திற்குப் பின் 7 வருடங்கள் கழித்து அமீர்கான் நடிப்பில் தூம் 3, 2013ம் ஆண்டு வெளிவந்தது. தூம் 2 வை விட சுவாரசியம் சற்று கம்மிதான் எனினும் அமீர்கான் நடிப்பினால் படம் உலகளவில் நன்கு ஓடியது. 175 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் சுமார் 533 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது. இன்றளவும் இந்தியளவில் அதிகம் வசூலித்த 4 வது படமாக தூம் 3 உள்ளது குறிப்பிடத்தக்கது.

தூம் 4
முதல் 3 பாகங்களை செவ்வனே தயாரித்த யஷ் ராஜ் பிலிம்ஸ் 4 வது பாகத்தையும் தயாரிக்கவிருக்கிறது.4 வது பாகம் வெளியானால் இந்தியாவில் அதிக பாகங்கள் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை இந்தப் படம் பெறும். முதல் 3 பாகங்களை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யாவே இந்தப் படத்தையும் இயக்கவிருக்கிறார். முதல் 3 பாகங்களை விட இந்தப் பாகத்தை பிரமாண்டமாகவும் அதிக பொருட்செலவிலும் எடுக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

சல்மான் கான்
4 வது பாகத்தில் கொள்ளையடிக்கும் ஹைடெக் வில்லனாக சல்மான் கானை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும் படக்குழுவினரும் சல்மான் கானை நடிக்க வைக்கவே விரும்புவதாக யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. சல்மான் கான் இந்தப் பாகத்தில் நடிப்பதன் மூலம் முதல் 3 பாகங்களின் வசூல் வரலாற்றையும் படம் முறியடிக்கும் என்று இப்பொழுதே பாலிவுட்டினர் கருத்துக் கூற ஆரம்பித்து விட்டனர்.

ஷாரூக் தொடங்கி
முன்னதாக இந்தப் பாகத்தில் நடிக்க ஷாரூக்கான் தொடங்கி ரன்வீர் சிங், ரன்பீர் கபூர் மற்றும் ஹிருத்திக்ரோஷன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பாகத்தின் மூலம் ஷாரூக்கானின் மூத்த மகன் ஆர்யன் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











