'குரு' பாலச்சந்தரின் கதையைப் படமாக்கும் 'சிஷ்யன்' சமுத்திரக்கனி
சென்னை: குரு பாலச்சந்தரின் கடைசிக் கதையை படமாக்கும் முயற்சிகளில் அவரது சிஷ்யன் சமுத்திரக்கனி இறங்கியிருக்கிறார்.
கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சமுத்திரக்கனி இன்று நடிப்பு, இயக்கம் என இரண்டிலுமே வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

தற்போது 'அப்பா', 'கிட்ணா' போன்ற படங்களை இயக்கி வரும் சமுத்திரக்கனி அடுத்ததாக பாலச்சந்தர் கடைசியாக எழுதிய கதையை படமாக்கவிருக்கிறார்.
இதுகுறித்து சமுத்திரக்கனி '' இப்படம் எனது குருநாதரின் கனவாக இருந்தது. இப்படத்தை எடுக்க நான் எந்தத் தயாரிப்பாளரிடமும் சென்று நிற்கப்போவதில்லை.
நானே தயாரித்து இப்படத்தை இயக்கவிருக்கிறேன். என்னுடைய அடுத்த படமான 'அப்பா' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றால் இப்படத்தின் தயாரிப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி விடுவேன்.
'அப்பா' ஒருவேளை வரவேற்பைப் பெறத்தவறினால், இப்படத்திற்கு தேவையான பணத்தை சம்பாதிக்கும் வரையில் இப்படத்தின் பணிகளை நிறுத்தி வைக்கத் திட்டமிட்டுள்ளேன்'' என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக பாலச்சந்தர் இப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து, ஒரு முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துத் தரும்படி சமுத்திரக்கனியிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்தில் விசாரணை படத்திற்காக சமுத்திரக்கனி தன்னுடைய முதல் தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











