சண்டக்கோழி 2 ட்ராப்... லிங்குசாமியை ட்விட்டரில் தாக்கிய விஷால்!
சென்னை: "நடிகர்கள் நடிப்பிலும், இயக்குனர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது" என்று நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.
தற்போது மருது படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஷால், சண்டக்கோழி 2 படம் கைவிடப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
மேலும் படைப்பாளிகளில் சிலர் தங்கள் பணி மீது கவனம் செலுத்தாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
விஷாலின் இந்த அறிவிப்பு தற்போது தமிழ்த் திரையுலகில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சண்டக்கோழி
விஷால், ராஜ் கிரண், மீரா ஜாஸ்மின் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2005 ம் ஆண்டு வெளியான படம் சண்டக்கோழி. லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

சண்டக்கோழி 2
இந்நிலையில் காலத்திற்கு தகுந்தாற்போல இப்படத்தின் 2 வது பாகத்தை எடுக்க லிங்குசாமியும், விஷாலும் முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டனர். மேலும் முதல் பக்கத்தில் நடித்த ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் இப்பாகத்திலும் நடிப்பார்கள் என்று கூறப்பட்டது.
விஷால் அறிவிப்பு
வருகின்ற மார்ச் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவிருந்த நிலையில், இப்படம் கைவிடப்பட்டதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். மேலும் "சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது". என்று அவர் மறைமுகமாக சில வார்த்தைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

லிங்குசாமி
விஷால் தனது ட்வீட்டில் லிங்குசாமியை மறைமுகமாகத் தாக்க காரணம் அல்லு அர்ஜுன் தான் என்று கூறுகின்றனர். தற்போது அல்லு அர்ஜுனை இயக்கப்போகும் படத்திற்கான வேலைகளில் லிங்குசாமி மும்முரமாக இறங்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதக் கடைசியில் தொடங்க லிங்குசாமி திட்டமிட்டிருந்தாராம். அந்தப் படத்தை முடித்த பின் அவர் சண்டக்கோழி படத்தை துவங்குவதாக விஷாலிடம் கூற, விஷால் அதனை விரும்பவில்லையாம்.

அல்லு அர்ஜுன்
சண்டக்கோழி 2 வை முடித்து விட்டு அல்லு அர்ஜுன் படத்தைத் துவங்குங்கள் என்று விஷால் கூற, அதற்கு லிங்குசாமி மறுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த விஷால் சண்டக்கோழி 2 கைவிடப்பட்டதாக அறிவித்து இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.லிங்குசாமி அல்லு அர்ஜுனுக்கு அளித்த முக்கியத்துவம் தான் விஷால் இப்படி அதிரடியாக முடிவெடுக்கக் காரணம் என்று கோலிவுட் வட்டரங்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications











