நேற்று சூர்யா, இன்று விஷால், நாளை யாரோ?... வருத்தத்தில் இயக்குநர்கள்
சென்னை: சண்டக்கோழி 2 படம் குறித்து நடிகர் விஷால் தெரிவித்த கருத்துக்கள் கோலிவுட்டினர் மத்தியில் பெரும் சர்ச்சைகளை எற்படுத்தியிருக்கிறது.
விஷால் வெறுமனே படம் நிறுத்தப்பட்டது என்று மட்டும் கூறாமல் இயக்குநர்கள் இயக்கத்தையும், நடிகர்கள் நடிப்பையும் கவனிக்க வேண்டும் என்று சில அறிவுரைகளையும் வழங்கியிருந்தார்.
முன்னர் இதேபோல சூர்யா நடந்து கொண்ட நிலையில் தற்போது விஷாலும் அவ்வாறு செய்திருப்பது இயக்குநர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

காக்க காக்க
சூர்யாவிற்கு காக்க காக்க, வாரணம் ஆயிரம் என்று 2 திருப்புமுனைப் படங்களைக் கொடுத்தவர் கவுதம் மேனன். தொடர்ந்து 3 வது முறையாக துருவ நட்சத்திரம் படத்தில் இருவரும் இணைவதாக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக சூர்யா இந்தப் படத்திலிருந்து விலகுவதாக ஊடகங்கள் முன்னிலையில் அறிவித்தார்.

என்னை அறிந்தால்
துருவ நட்சத்திரம் டிராப் விவகாரத்தால் துவண்டு போன கவுதம் மேனன் விரைவில் சுதாரித்து அஜீத்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தை எடுத்தார். என்னை அறிந்தால் அஜீத்- கவுதம் மேனன் இருவருக்குமே பிரேக் கொடுத்தது. தற்போது சூர்யா நடிக்க மறுத்த துருவ நட்சத்திரம் படத்தை ஜெயம் ரவியை வைத்து கவுதம் மேனன் இயக்கவிருக்கிறார்.

சண்டக்கோழி
செல்லமே படத்தில் அறிமுகமான விஷாலுக்கு, சண்டக்கோழி என்ற ஆக்ஷன் படத்தைக் கொடுத்து அவரது மார்க்கெட்டை உயர்த்தி விட்டவர் லிங்குசாமி. இதனால் மீண்டும் இருவரும் சண்டக்கோழி 2 படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக சண்டக்கோழி 2 தள்ளிப்போக அப்படம் கைவிடப்பட்டதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் இயக்குநர் லிங்குசாமி மீது அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் அளித்தார்.
அறிவுரைகள்
வெறுமனே படம் கைவிடப்பட்டது என்று மட்டும் கூறாமல் "சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது". என்று அவர் மறைமுகமாக சில அறிவுரைகளையும் கூறியிருந்தார்.

லிங்குசாமி
விஷாலின் இந்தத் தாக்குதல் மற்றும் அறிவுரைகள் கோலிவுட் இயக்குநர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு படம் ஆரம்பிப்பது மற்றும் நின்று போவது ஆகியவை சாதாரண நிகழ்வுகள்தான். ஆனால் அதைப்பற்றி விஷால் வெளிப்படையாக அறிவித்தது மட்டுமல்லாமல் இயக்குநர்கள் குறித்தும் கூறியிருப்பது இயக்குநர்கள் பலரின் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதாம். இந்த விவகாரத்தில் இயக்குநர் லிங்குசாமி எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை அப்படம் கைவிடப்பட்டது உண்மைதான் என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











