தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக...பேய்களை பயமுறுத்தப் போகும் சந்தானம்
சென்னை: தில்லுக்கு துட்டு படத்தில் பேய்களை பயப்பட வைப்பவராக சந்தானம் நடித்து வருகிறாராம்.
'லொள்ளு சபா' புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்து வரும் படம் தில்லுக்கு துட்டு. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களைத் தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படமிது.
சந்தானத்துடன் இணைந்து ஷனன்யா, கருணாஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். பேய்ப்படங்களுக்கு பெயர் போன ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது.

இப்படத்தின் கதை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தில்லுக்கு துட்டு பேய்ப்படம் என்றாலும் பேய்களைப் பார்த்து சந்தானம் பயப்பட மாட்டாராம்.
மாறாக பேய்கள் தான் இவரைப் பார்த்து பயப்படுமாம். இதனை வைத்து முழுக்கவே காமெடிப்படமாக, தில்லுக்கு துட்டு படத்தை எடுத்திருப்பதாக படக்குழு கூறுகிறது.
இதுவரை பேய்களுக்கு பயப்படும் நாயகனை மட்டுமே பார்த்த ரசிகர்கள், இப்படத்தில் பேய்கள் பயப்படுவதைப் பார்த்து வயிறு குலுங்க சிரிக்கலாம் என்றும் படக்குழு உத்தரவாதம் கொடுக்கிறது.
மொத்தப் படப்பிடிப்பும் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வருகின்ற கோடை விடுமுறையில் தில்லுக்கு துட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











