தில்லுக்கு துட்டு 3ம் பாகத்தை குறிவைத்த சந்தானம்.. ஆனால், அந்த முடிவை ஏன் எடுத்தார்?
சென்னை: நடிகர் சந்தானம் ஹீரோவான பின்னர் அவர் ஏகப்பட்ட படங்களில் நடித்துத் தள்ளி உள்ளார்.
ஆனால், அவருக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது தில்லுக்கு துட்டு படம் தான்.
அதன் இரண்டாம் பாகமும் நல்ல வசூலை ஈட்டித் தந்த நிலையில், முன்றாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் சந்தானம் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நம்பர் ஒன் காமெடியன்
என்.எஸ். கிருஷ்ணன், நாகேஷ், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு என தமிழ் சினிமா ரசிகர்களை ஏகப்பட்ட காமெடியன்கள் சிரிக்க வைத்துள்ளனர். வடிவேலுவுக்கு பிறகு கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். ரஜினி, அஜித், விஜய் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் அவர் காமெடியனாக நடித்து அசத்திய நிலையில், இப்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்.

ஹீரோவாக
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான அறை எண் 305ல் கடவுள் படத்தில் ஹீரோவாக நடித்து நல்ல வரவேற்பை பெற்ற சந்தானம், தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முடிவு செய்தார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார். தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்கப்போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, ஏ1, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி என பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

லாபம் கொடுத்த படம்
இதில், நடிகர் சந்தானத்துக்கு பல படங்கள் சொதப்பிய நிலையில், சில படங்கள் முதலுக்கு மோசம் இல்லாத நிலையை உருவாக்கியது. ஆனால், மிகப்பெரிய லாபமாக மாறிய படங்கள் என்றால் அது தில்லுக்கு துட்டு மற்றும் அதன் இரண்டாம் பாகம் தான். இந்நிலையில், அதன் மூன்றாம் பாகத்தை உருவாக்க சந்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தில்லுக்கு துட்டு 3
பேய்களையே கலாய்க்கும் விதமாக உருவான தில்லுக்கு துட்டு படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சந்தானம் மற்றும் மொட்டை ராஜேந்தர் இணைந்து செய்த காமெடி அட்டகாசங்கள் எல்லாம் ரசிகர்களை திரையரங்குகளில் குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. இந்நிலையில், அதன் மூன்றாம் பாகம் உருவானால் நிச்சயம் காமெடிக்கு கியாரண்டியாக அந்த படம் இருக்கும் என்பது கன்ஃபார்ம்.
Recommended Video

இயக்குநர் மாற்றம்
ஆனால், முதல் இரு பாகங்களை இயக்கிய இயக்குநர் ராம்பாலா தில்லுக்கு துட்டு 3ம் பாகத்தை இயக்கவில்லை என்றும் அவரது இணை இயக்குநர் ஆனந்த் தான் இந்த படத்தை இயக்கப் போகிறார் என்கிற தகவல் தான் ஒரு சிறிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தையும் ராம்பாலாவே இயக்காமல் ஏன் அவரது இணை இயக்குநர் இயக்குகிறார் என்கிற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக தில்லுக்கு துட்டு 3 ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











