எடிட்டர் கிஷோர் உடல் நிலை குறித்த தட்ஸ்தமிழ் செய்தி... சரத்குமாரின் ட்விட்டர் பதில்!
சென்னை: தேசிய விருது பெற்ற ஆடுகளம் எடிட்டர் கிஷோரின் நிலைமையைப் பாருங்கள் என்ற தலைப்பில் தட்ஸ்தமிழ் (ஒன்இந்தியா தமிழ்) வெளியிட்ட செய்திக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
எடிட்டர் கிஷோர் கடந்த இரு தினங்களாக கோமா நிலையில் விஜயா மருத்துவமனையில் கிடக்கிறார். வெள்ளிக்கிழமையன்று மயங்கி விழுந்த அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் அவர் யார் என்று அடையாளம் தெரியாததால் முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தினார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர் அவரது உறவினர்கள்.
இந்த நிலையில் அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, தலை முழுக்கப் பரவி விட்டதால் அவரைக் காப்பாற்றுவது கஷ்டம் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்களாம்,
தேசிய விருது பெற்ற ஒரு முன்னணி திரைப்படக் கலைஞரை கவனிக்கக் கூட ஆளில்லை என்று நமது செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இந்த செய்தியின் சுட்டி ட்விட்டரில் பகிரப்பட்டிருந்தது. இதனை சிலர் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு பகிர்ந்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர், "கிஷோரின் நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளிச்ச உயர் மருத்துவர்களிடம் தொடர்பில் உள்ளோம். கிஷோரின் சகோதரர் மற்றும் இயக்குநர் வெற்றி மாறனிடமும் விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











