சரத்குமார் நடிக்கும் 'சென்னையில் ஒரு நாள் -2'... படமாகும் ராஜேஷ்குமார் நாவல்!
குற்றம் 23 -ன் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமா இயக்குநர்கள் பலரது பார்வையும் கோவைப் பக்கம் திரும்பியுள்ளது. அங்குதானே பிரபல க்ரைம் த்ரில்லர் எழுத்தாளர் ராஜேஷ்குமார் இருக்கிறார்.
தினசரி யாராவது இயக்குநர் ராஜேஷ்குமார் ஏற்கெனவே எழுதிய நாவல்கள் அல்லது புதிய கதைகள் கேட்டு வருகிறார்களாம்.

2500-க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியவராயிற்றே.. சளைக்காமல் கதைகளைத் தருகிறார்.
இப்போது சரத்குமார் நடிக்கும் புதிய படத்துக்கும் ஒரு விறுவிறுப்பான க்ரைம் கதையைத் தந்திருக்கிறார்.
கல்பதரு பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சென்னையில் ஒரு நாள் -2 என்று தலைப்பிட்டுள்ளனர்.
ராம் மோகன் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார். தீபக் ஒளிப்பதிவாளராகவும், 'மாயா' புகழ் ராண் இசையமைப்பாளராகவும், சோலை அன்பு கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர்.

முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். நிசப்தம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படம் குறித்து ஜெபிஆர் கூறுகையில், "சென்னையில் ஒரு நாள் -2' படத்தில் சரத்குமாரின் கதாபாத்திரம் ஒரு 'under cover agent'. அவர் புலன் விசாரணை செய்யும் முறை பரபரப்பாக இருக்கும். இந்த திரைப்படம் அனைவருக்கும் ஒரு திருப்பு முனையாக அமையும்," என்கிறார்.

இப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்றது. 'சென்னையில் ஒரு நாள் -2' படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கி தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











